திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை நம்பவைத்து ஆட்சிக்கு வந்ததாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை நம்பவைத்து ஆட்சிக்கு வந்ததாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். ஈரோட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுக தொடங்கிய காலத்திலிருந்தே ஈரோடு அதிமுகவின் எஃகு கோட்டை என்றும், அதிமுகவை அழிக்க திமுக செய்த சதி வேலைகளை முறியடித்தவர் ஜெயலலிதா என்றும் தெரிவித்தார். அதிமுக அரசு ரூ.33 ஆயிரம் கோடியை கல்விக்காக ஒதுக்கியதன் மூலம் 52% மாணவர்கள் உயர் கல்விக்கு செல்வதாகவும், கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றியதாகவும் கூறினார்.

மேலும், திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை நம்பவைத்து ஆட்சிக்கு வந்தாகவும், திமுக அரசு எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்றும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தே நீட் ரத்து குறித்த கையெழுத்து தான் என்ற ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகியும், நீட்டை ரத்து செய்யவில்லை என்றும், பார்க்க வேண்டியவர்களை பார்த்து, விளக்க வேண்டியதை விளக்கி, நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதே சட்டபூர்வ நடவடிக்கை என்பது அதிமுகவின் நிலைப்பாடு என்றும் கூறினார்.

மேலும், நிதியுதவி இல்லாமல் கொடுத்த பொங்கல் பொருட்கள் அனைத்தும் தரமற்ற பொருள்கள் என்று குற்றம்சாட்டிய ஓ.பன்னீர்செல்வம், பொருட்களை வடநாட்டில் கொள்முதல் செய்துள்ளதாகவும், புரட்சித்தலைவர் சொன்னது போல எப்பவும் போல திமுக விஞ்ஞான ஊழலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். மேலும், மக்களுக்கு பயன் பெறும் திட்டங்களை துரிதமாக செயல்படுத்தும் அரசு தான் நல்லரசு என்றும், உள்ளாட்சியில் பெண்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற வேண்டும் என்பதற்காகவே 50% இடஒதுக்கீடு கொண்டுவந்தவர் ஜெயலலிதா என்றும் கூறினார். மேலும், 10 மாத திமுக ஆட்சியின் அவல நிலைகளை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
