தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு இன்னும் இரண்டு வார காலம் மட்டுமே உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது திமுகவின் எந்த அளவிற்கு உஷாராக இருக்க வேண்டும் என்பதற்காக ஜூம் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு இன்னும் இரண்டு வார காலம் மட்டுமே உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது திமுகவின் எந்த அளவிற்கு உஷாராக இருக்க வேண்டும் என்பதற்காக ஜூம் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பெரும்பாலான தொகுதிகளின் வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தன. சில தொகுதிகளில் நூறுக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி – தோல்வி தீர்மானிக்கப்பட்டன. ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணப்படாமலேயே அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது போன்ற சமயங்களில் அதிகாரிகளை திமுகவினர் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வு கடந்த முறை வேட்பாளர்கள் உள்ளிட்ட யாரிடமும் இல்லை என்று பரவலாக பேச்சு எழுந்தது.

அதிமுக அதிக இடங்களில் முன்னிலை பெற்று இருந்த நிலையில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவினர் முன்னிலையில் இருந்த தொகுதிகள் பல கடைசி நேரத்தில் அதிமுக வசம் சென்றது. இதற்கு காரணம் கடைசி நேரத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த திமுகவினர் தவறான முடிவுகளை எடுத்தது தான் என்றும் சொல்லப்பட்டதுண்டு. சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவுடைவதற்கு முன்னரே திமுக ஏஜென்டுகள் வெளியேறிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போதைய சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் கடந்த முறையை போலவே மிக மிக பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

குறைந்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் தொகுதிகளில் திமுக ஏஜென்டுகள் எப்படி செயல்பட வேண்டும் என்று இந்த முறை அக்கட்சி தலைமை ஒரு செயல்திட்டத்தை தயார் செய்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு தொகுதிக்கு என்றும் தனித்தனியாக தேர்தல் வழக்குகளில் திறமையான வழக்கறிஞர்களை சட்டரீதியான பிரச்சனைகளுக்கு என்று பொறுப்பாளராக திமுக நியமித்துள்ளது. மேலும் வழக்கறிஞர்கள் பலர் இந்த முறை திமுகவிற்காக வாக்கு எண்ணும் மையங்களில் ஏஜென்டுகளாக பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இதன் மூலம் கடைசி நேரத்தில் அதிகாரிகள் கூறும் விஷயங்களை சட்டப்படி கவுண்டர் செய்ய முடியும் என்று திமுக கருதுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களிலும் தொகுதி வாரியாக ஏஜென்டுகளை இறுதி செய்துள்ளது திமுக. அவர்களுக்கு ஜூம் மீட்டிங்கில் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்ட்டுள்ளன. திமுக எம்பியும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ வாக்கு எண்ணும் மையத்தில் இருக்கப்போகும் திமுக ஏஜென்டுகளுக்கு வகுப்புகள் எடுக்க உள்ளார். இதற்கு என்று பிரத்யேக கையேடு ஒன்றும் திமுக தயார் செய்துள்ளது. அதில் வாக்கு எண்ணும் மையத்தில் என்னென்ன செய்ய வேண்டும், என்னவற்ற அதிகாரிகளை செய்ய அனுமதிக்க கூடாது என்கிற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த கையேடு அடிப்படையில் நடைபெறும் ஜூம் மீட்டிங்கின் போது அனைத்து முகவர்களுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கு தயாராவது எப்படி என்று இளங்கோ பாடம் நடத்த உள்ளார்.