கடந்த சனிக்கிழமை நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.
ஓபிஎஸ் சசிகலா இடையே நடைபெற்ற அதிகாரப் போட்டி கடந்த வாரத்தில் உச்சத்தை எட்டியது. சசிகலா தரப்பில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரை பெரும்பான்மையை நிருபிக்கக் கோரி ஆளுநர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது சகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

வரலாறு காணாத அமளியால் அவை 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்களை அவையை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தவிட்டார். ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
அப்போது ஸ்டாலின் உள்ளிட்டோர் சட்டடை கிழிக்கப்பட்டது. பலர் காயமடைந்தனர். பின்னர் தனபால் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். அப்போது 122 வாக்குக்ள் பெற்று எடப்பாடி பழனிசாமி வெற்டிற பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் ஆளுநரிடம் முறையிட்டனர். தொடர்ந்து மெரினாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திமுக எம்எல்ஏ க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சட்டப் பேரவை அத்துமீறல் குறித்து நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக மனு அளித்தால் இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதால், இன்று பிற்பகலுக்குள் மனு தாக்கல் செய்யப்படும் என திமுக அறிவித்துள்ளது.
