பரபரப்பான அரசியல் சூழலில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே திமுக செயற்குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது.  

அழகிரி போர்க்கொடி தூக்கியுள்ள பரபரப்பான அரசியல் சூழலில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த 2014 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு முன்னதாக தென்மண்டல திமுக பொறுப்பாளராக அழகிரி இருந்துவந்தார். 

கருணாநிதியின் மறைவிற்கு பிறகு மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பை பெறும் முனைப்பில் அழகிரி உள்ளார். அதிலும் பொருளாளர் பதவிதான் வேண்டும் என கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் தனது மகனுக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பு கேட்டுவருவதாக கூறப்படுகிறது. 

ஆனால் அழகிரியை மீண்டும் இணைக்க திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் அழகிரியை இணைக்க வேண்டாம் என ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது. இதற்கிடையே நேற்று மெரினாவிற்கு சென்று கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய அழகிரி, தனது ஆதங்கத்தை தந்தையிடம் தெரிவித்ததாகவும், அது கட்சி ரீதியான ஆதங்கம் தான் எனவும் தெரிவித்தார். மேலும் கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் தன் பக்கமே உள்ளதாகவும் தெரிவித்தார். 

அழகிரி போர்க்கொடி தூக்கியுள்ளதை அடுத்து பரபரப்பான அரசியல் சூழலில், திமுக செயற்குழு கூட்டம் கூடியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் ஸ்டாலின் தலைமையில் செயற்குழு கூடியுள்ளது. 

செயற்குழுவில், பொதுக்குழுவை கூட்டி திமுக தலைவராக ஸ்டாலினை தேர்ந்தெடுப்பது, கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் அழகிரி குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.