திருட்டு வழக்கில் திமுக பிரமுகர் கைது.. போலீசாரை தாக்கி கை விலங்கு உடைப்பு.. விடியா அரசை விடாமல் அடிக்கும் EPS
தமிழக காவல்துறையினரின் கையை கட்டிப்போட்டிருக்கும் கைவிலங்கை அகற்றி சுதந்திரமாக செயல்பட விடுமா இந்த விடியா அரசு? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக காவல்துறையினரின் கையை கட்டிப்போட்டிருக்கும் கைவிலங்கை அகற்றி சுதந்திரமாக செயல்பட விடுமா இந்த விடியா அரசு? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை மாவட்டம், குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீட்டு உரிமையாளரை திசைத் திருப்பி வீட்டுக்குள் புகுந்து 7 பவுன் தங்க நகைகள், வைர வளையல்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கின் விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுவிதாவின் கணவரும், திமுக பிரமுகருமான கணேஷ் என்பவர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கோவை யிலிருந்து காவல் உதவி ஆய்வாளர் தலைமையில், 1 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், 3 காவலர்கள் கணேஷை கைது செய்வதற்காக ஆம்பூருக்கு நேற்று முன்தினம் காலை வந்தனர்.
ஆம்பூர் அடுத்த எல்.மாங்குப்பம் கிராமத்தில் கணேஷ் இருந்தபோது அங்கு சென்ற கோவை தனிப்படை காவல் துறையினர், கணேஷை சுற்றி வளைத்து அவரை கைது செய்து கையில் விலங்கிட்டு காரில் அழைத்துச் செல்ல முயன்றனர். இந்த தகவலறிந்த கணேஷின் ஆதரவாளர்கள் தனிப்படை காவலர்களுடன் கடும் வாக்குவாதம் செய்து, அவரை காரிலிருந்து வெளியே இழுத்துள்ளனர். கணேஷின் கையில் விலங்கிடப்பட்டிருந்து.
மற்றொரு பகுதி காவலரின் கையும் விலங்கில் இணைக்கப்பட்டிருந்தது. கணேஷை அவரது ஆதரவாளர்கள் காரிலிருந்து வெளியே இழுத்துச் சென்றபோது கை விலங்கிடப்பட்டிருந்த காவலரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த பட்டறைக்கு அழைத்துச் சென்று அங்கு இருந்த இரும்பு அறுக்கும் இயந்திரம் மூலம் கை விலங்கை அறுத்து எறிந்துவிட்டு கணேஷின் ஆதரவாளர்கள் அவரை மீட்டுச் சென்று தலைமறைவாகினர். காயமடைந்த கோவை காவலர் ஞானப்பிரகாசம், ராஜா முகமது ஆகிய இருவரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழக காவல்துறையினரின் கையை கட்டிப்போட்டிருக்கும் கைவிலங்கை அகற்றி சுதந்திரமாக செயல்பட விடுமா இந்த விடியா அரசு? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இனியாவது காவல்துறையின் கைவிலங்கை இந்த விடியா அரசு அகற்றிடுமா!
ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவி திருமதி.கவிதா-வின் கணவரும், திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வரும் திமுக பிரமுகருமான கணேஷை காவல்துறையினர் கைது செய்து அழைத்து செல்லும் வழியில், கணேஷின் ஆதரவாளர்கள், காவலர்களை தாக்கி கைதி கணேஷை அருகிலுள்ள வெல்டிங் கடைக்கு அழைத்துச் சென்று, கைவிலங்கை உடைத்து தப்பிக்க வைத்ததாக ஊடகங்களில் வரும் செய்திகளை பார்க்கும்போது, இனியாவது தமிழக காவல்துறையினரின் கையை கட்டிப்போட்டிருக்கும் கைவிலங்கை அகற்றி சுதந்திரமாக செயல்பட விடுமா இந்த விடியா அரசு? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.