ரெய்டு பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக அஞ்சாது... பதறியடித்துக் கொண்டு விளக்கம் கொடுத்த துரைமுருகன்...!
சென்னை நீலாங்கரையில் உள்ள மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மருமகன் சபரீசன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் வீடுகளில் சமீப காலமாக இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. திமுக வேட்பாளர்களான எ.வ.வேலு, செந்தில் பாலாஜி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதேபோல் அதிமுக அமைச்சர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. பணப்பட்டுவாடா போன்ற விதிமீறல்கள் குறித்து தங்களுக்கும் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை நீலாங்கரையில் உள்ள மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மருமகன் சபரீசன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. செந்தாமரை வீடு, அலுவலகம் உள்பட 4 இடங்களில் 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், சபரீசனின் நண்பர்களான கார்த்திக்(அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகன் மகன்), ஜீ ஸ்கொயர் பாலா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. நீலாங்கரையில் உள்ள ஐபேக் அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “திடீரென திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் அரசியல் நோக்கத்தோடு சோதனை நடைபெற்று வருகிறது. தேர்தல் நேரத்தில் இப்படிப்பட்ட சோதனைகளை நடத்தினால் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர், திமுக உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்துவிடுவார்கள் என மத்திய அரசு கணக்கு போடுகிறது. இத்தகைய பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படுபவர்கள் திமுகவினர் கிடையாது. மிசா காலத்தில் தலைவரின் துணைவியார் ராஜாத்தி அம்மையார் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது தலைவர் கருணாநிதி வெளியே உட்கார்ந்து கொண்டு உடன்பிறப்பு மடல் எழுதிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் கேலியாக பேசியதைக் கூட காதில் வாங்காத தலைவரின் மகன் தான் மு.க.ஸ்டாலின். அவர் வாழைக்கு கன்றாக பிறக்கவில்லை, ஆலமரத்தின் விழுதாக வந்தவர். தந்தையை விட மு.க.ஸ்டாலின் இரும்பு நெஞ்சம் கொண்டவர். ஸ்டாலினையோ, திமுகவினரையோ அச்சுறுத்தலாம் என நினைத்தால் இதை விட அரசியல் அப்பாவித்தனம் இருக்க முடியாது” என பதற்றத்துடன் விளக்கமளித்தார்.