திமுகவுக்கு அந்த சரித்திரமே கிடையாது... விழுப்புரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்..!
திமுகவைப் பொறுத்தவரை சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகச் சரித்திரமே கிடையாது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 202 அறிவிப்புகளை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் சொல்கிறார். அப்படியெனில் எவ்வளவு திட்டங்களை நிறைவேற்றியிருக்க வேண்டும்? தேர்தலின்போது 505 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். பின்னர் கூடுதலாக 20 என 525 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. அதில் 202 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதாகக் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் 3, 4 அறிவிப்புகள் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மற்றவை எல்லாமே சாதாரண அறிவிப்புகள். இதனை ஊடகங்களில் முதல்வரே வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவுக்கு உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளைகள் நடக்கின்றன. திருட்டு உச்சத்துக்குச் சென்றுள்ளது. ரவுடிகளைக் கைது செய்வதாக டிஜிபி சொல்கிறார். அப்படியென்றால், இவ்வளவு நாட்கள் என்ன செய்தீர்கள்? அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. சிறப்பாக ஆட்சி செய்ததாக நாங்கள் விருதுகள் பெற்றோம். ஆனால், இந்த ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது.
நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார்கள். ஆனால், தற்போது சன்ன ரகத்திற்கு ரூ.300-ஐ மட்டுமே உயர்த்தியுள்ளார்கள். கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்தார்கள். தற்போது ரூ.105 மட்டுமே உயர்த்தியுள்ளார்கள். அதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே உணவு தானிய உற்பத்தியில் 100 லட்சம் மெட்ரிக் டன் பெற்று விருது பெற்றோம். அதிமுக அரசு மக்களின் அரசாக இருந்தது. பின்தங்கிய மாவட்டமான விழுப்புரத்தில் இளைஞர்கள் படிக்கும் வகையில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கினோம். ஆனால், இந்த ஊரைச் சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர், அதை அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைப்பதாக அறிவித்துள்ளார்.
குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 என அறிவித்தார்கள். கல்விக் கடன் தள்ளுபடி என்றார்கள். முதியோர் உதவித்தொகை ரூ.1,500 என்றார்கள். மகளிர் சுய உதவிக்குழு வாங்கிய கடன் தள்ளுபடி என்றார்கள். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்று சொல்லிவிட்டு தற்போது மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறோம் என்று பச்சைப் பொய் சொல்கிறார்கள். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் எல்லாத் தரப்பு மக்களையும் ஏமாற்றிய கட்சி திமுக. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
திமுகவைப் பொறுத்தவரை சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகச் சரித்திரமே கிடையாது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மினி கிளினிக்கைப் படிப்படியாகக் குறைத்துவிட்டார்கள். அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட நடமாடும் மருத்துவமனை என்பதை மக்களைத் தேடி மருத்துவம் என்று பெயர் மாற்றி சொல்கிறார்கள். அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக கொண்டுவந்த திட்டங்களாகச் சொல்கிறார்கள்.” என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.