ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்துவது? முக்கிய முடிவெடுக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, ‘ திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், மாவட்டச் செயலாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனவும் இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் மற்றும் கட்சி ஆக்கப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.நகர். நகர் இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த முறை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது திமுக வேட்பாளராக மருது கணேஷ் நிறுத்தப்பட்டிருந்தார். மீண்டும் அவரையே நிறுத்தலாமா? என்பது பற்றி ஆலோசனை நடத்தப்படலாம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.