திமுக- காங்கிரஸ் கூட்டணி உடைந்துவிடும்… கமல்ஹாசன் அதிர்ச்சி தகவல் !!
திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு இருப்பதாகவும், காங்கிரசுடன் மக்கள் நீதி மையம் கூட்டணி அமைக்கும் என்றும் தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
சேலத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன், தி.மு.க.வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது என்றும், காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதை மறுப்பதற்கில்லை என்றும் தெரிவித்தார்.. அதே நேரத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உடையக்கூடிய வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவிததார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என கூறிய கமல்ஹாசன், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை தமிழக அரசியலில் இருந்து அகற்ற மக்கள் நீதி மய்யம் பாடுபடும் என்றும் அ.தி.மு.க.வையும், தி.மு.க. வையும் மக்கள் நீதி மய்யம் சரிசமமாகத்தான் அணுகுகிறது என்றும் தெரிவித்தார்..
சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதன் மூலம், அங்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதனால் பெண்கள் அங்கு செல்வதை தடுக்கக் கூடாது என தெரிவித்தார்..
கல்லூரிகளில் அரசியல் பேசுவது குற்றமல்ல. மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் கல்லூரிகளில் அரசியல் பேசினாலும் தவறில்லை.
ஆனால் கல்லூரிகளுக்கு தமிழக அரசு ரகசிய சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் நடிகர்களை உள்ளே அனுப்பாதீர்கள் என்று கூறி உள்ளது. அரசியல் பேச அனுமதிக்காதீர்கள் என்று அரசாணை அனுப்பிவிட்டு, மறுநாள் முதலமைச்சர் ஒரு கல்லூரியில் அரசியல் பேசுகிறார் என குற்றம்சாட்டினார்.