தற்போதைய கூட்டணி உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்று திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் விரும்புகின்றன. ஆனால், கூடுதல் இடங்களைக் கேட்டு குடைச்சல் கொடுப்பதைத் தவிர்க்கும் வகையில் திமுக சில காய்களை நகர்த்திவருவதாக தெரிகிறது. 

உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடலாம் என்று காங்கிரஸ் நினைத்த வேளையில், அதற்கு செக் வைக்கும் விதமாக காங்கிரஸ் எதிர்ப்பு பேச்சை திமுகவினர் மேற்கொள்ள கட்சி மேலிடம் பச்சைக் கொடி காட்டிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


‘காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் எத்தனை நாளுக்கு பல்லக்குத் தூக்குவது’ என திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேசியது திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. அதற்கு பதில் அளித்த தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் செயலாளர் கராத்தே தியாகராஜன், “உங்களை யார் பல்லக்குத் தூக்கச் சொன்னது” என்று கேள்வி எழுப்பி, கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது திமுக நடந்துகொண்ட விதத்தைச் சுட்டிகாட்டி பேசியது மேலும் சலசலப்பை கூட்டிவிட்டது.


கே.என்.நேரு பேசியதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டிக்கவும் இல்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கைவிட்ட பிறகும் அதைப் பற்றி திமுக அலட்டிக்கொள்ளவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 5 முதல் 7 சதவீத இடங்களை மட்டுமே திமுக வழங்கும் என்றும், ஒரு மேயர் பதவியும் வழங்காது என்றும் கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே திமுக முன்னணியினர் காங்கிரஸ் பற்றி பேசுவதை அக்கட்சி தலைமை கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.


தற்போதைய கூட்டணி உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்று திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் விரும்புகின்றன. ஆனால், கூடுதல் இடங்களைக் கேட்டு குடைச்சல் கொடுப்பதைத் தவிர்க்கும் வகையில் திமுக சில காய்களை நகர்த்திவருவதாக தெரிகிறது. அதன் காரணமாகவே இப்போது நடந்துவரும் பஞ்சாயத்து என்கிறார்கள் அக்கட்சியினர். இதற்கிடையே 'உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி சிதறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என மு.க. ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.