திமுக ஆட்சிக்கு வரதாவது... ஸ்டாலின் கனவு கானல் நீர்தான்... ஜெயக்குமார் சாபம்..!
திமுக மீண்டும் ஆட்சி என்பது பகல் கனவு. அது கானல் நீராகதான் இருக்கும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். “அதிமுக அசைக்கமுடியாத எக்கு கோட்டை. அதிமுக தலைமையில்தான் கூட்டணி. அதை மீறி எதுவும் இங்கே நடக்காது. எங்களைப் பொறுத்தவரை கூட்டணி தொடர்பாக பாஜக தலைமை கூறும் கருத்தைதான் ஏற்க முடியும். அங்கிருந்து வந்து செல்வர்கள் கருத்தையெல்லாம் ஏற்க முடியாது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான். இது அதிமுக கூட்டணியில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.
திமுக போல மைனாரிட்டி அரசாக தொங்கிக் கொண்டிருந்ததைப்போல அரசை நடத்த மாட்டோம். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். பெரும்பான்மையோடு வருபவர்களால்தான் முதல்வரை முடிவு செய்ய முடியும். அந்த வகையில் அதிமுகதான் வெற்றி பெற்று எடப்பாடி முதல்வராக இருப்பார். உண்மையில் திமுகவை நிராகரிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணமாக உள்ளது. ஏற்கனவே மக்கள் திமுகவை நிராகரித்தும் ஒதுக்கியும் வைத்துள்ளனர்.
தற்போது அவர்களே திமுகவை நிராகரிக்க வேண்டும் என்று பொருள்படும் வகையில் அதிமுகவை நிராகரிப்போம் என்று பிரச்சாரம் செய்து வருகிறது. எனவே திமுக என்னதான் பண பலத்தை பயன்படுத்தினாலும், அதிமுக காட்டாற்று வெள்ளம் போல் வெற்றி பெறும். திமுக மீண்டும் ஆட்சி என்பது பகல் கனவு. அது கானல் நீராகதான் இருக்கும். எம்ஜிஆர் வரலாறு தெரியாமல் எம்.ஜி.ஆர். பேசுகிறார். வாழும் சகாப்தமாக எம்.ஜி.ஆர் இருந்து வருகிறார். அவரை தொட்டால், அவர்கள் கெட்டார்கள்” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.