தொண்டர்களை சந்தித்த கருணாநிதி…. உற்சாகத்தில் உடன் பிறப்புகள் !!
ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். நடிகர்கள் கமலஹாசன் , ரஜினிகாந்த் ஆகியோர் டுவிட்டர் வாயிலாக தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளில் திமுக தொண்டர்களை சந்தித்து, 10 ரூபாய் பரிசாக வழங்குவது கருணாநிதியின் வழக்கம். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் பொங்கல் தினத்தன்று தொண்டர்களை சந்திக்கவில்லை.
இந்நிலையில் டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகு, இன்று திமுக தலைவர் கருணாநிதி இன்று தொண்டர்களை சந்தித்தார். இன்று காலை புத்தாடை அணிந்து வீட்டு வாசலுக்கு வந்தார்.
அவரைப் பார்த்த தொண்டர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர் , கருணாநிதியும் அவர்களுக்கு கைகளை அசைத்து வாழ்த்துத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கருணாநிதி வரிசையாக தொண்டர்களை சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். தொண்டர்கள் மட்டுமல்லாமல் திமுக நிர்வாகிகளும் கருணாநிதியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்த சந்திப்பின் போது டிஆர் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.