DMK cancels all party meeting! Stalin announcement

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக, தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான திமுக, வரும் 23 ஆம் தேதி நடத்தவிருந்த அனைத்து கட்சி கூட்டத்தை ரத்து செய்துள்ளது. மேலும், தமிழக அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக பங்கேற்று ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைத் தெரிவிக்கும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்திற்கு ஏற்கனவே நடுவர் நீதிமன்றம் 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறி இருந்த நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் 14.75 டி.எம்.சி. குறைக்கப்பட்டு 177.25 டி.எம்.சி. தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 

இவ்விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல கட்சித்தலைவர்கள் வலியுறுத்தியிருந்தார். மேலும், ஸ்டாலின் தலைமையில் 23 ஆம் தேதி அண்ணா அறிவாலையத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து சட்ட நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசணை நடத்தினார்.

இந்த ஆலோசணை கூட்டத்தில் 22 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 1.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் 23 ஆம் தேதி எதிர்கட்சிகள் சார்பில் நடத்தப்பட இருந்த அனைத்து கட்சி கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பங்கேற்று ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தெரிவிக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.