காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரை மாநிலங்களவைக்கு அனுப்புவது என்ற விவாதம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

திமுக சார்பில் ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கியப் பிறகு, மாநிலங்களவையில் காங்கிரசுக்கு 2 இடங்கள் உள்ளன. யாருக்கு கட்சி கொடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பல மாநிலங்களில் ஆட்சி அதிகார இழப்பு மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்கள் கொண்டுள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவையில் இடங்கள் குறைந்துவிட்டன. இதன் விளைவாக, காங்கிரஸ் கட்சி தனது பழைய மற்றும் மூத்த தலைவர்களை மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை இடத்தை திமுக வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரை மாநிலங்களவைக்கு அனுப்புவது என்ற விவாதம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

மூன்று ராஜ்யசபா இடங்களுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும், அதற்கான தேதியை இந்தியா தேர்தல் ஆணையம் ஓரிரு நாட்களில் அறிவிக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மூன்று இடங்களிலும் இரண்டு இடங்கள் திமுக போட்டியிடும். திமுக சார்பில் மாநிலங்களவைக்கு யாரை அனுப்புவது என்று தமிழகத்தின் புதிய முதல்வர் மற்றும் திமுக தலைவரான மு.க. ஸ்டாலின் இறுதி முடிவு செய்வார். மற்றொரு இடத்தை தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு வழங்கியுள்ளது. காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைக்கு செல்லப்போகுவது யார் என்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் இறுதி செய்யப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சதவ் மரணமடைந்ததை அடுத்து, மகாராஷ்டிராவில் இருந்து ஒரு ராஜ்யசபா இடமும் காலியாகிவிட்டது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்த்து, கட்சிக்கு இரண்டு இடம் இருப்பதால், இரண்டு பேரை மாநிலங்களவைக்கு அனுப்ப முடியும். அதில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸ் கட்சி சார்பில் அனுப்பலாம் எனத்தகவல். அதே நேரத்தில், மற்றொருவர் யார் என்பதும் கட்சி ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் காலியாக உள்ள ஒரு இடத்திற்கு முகுல் வாஸ்னிக், ராஜீவ் சுக்லா, ரஜ்னி பாட்டீல் ஆகிய மூன்று பேரின் பெயர்கள் ஆலோசனை செய்யப்படுவதாகவும், மற்றொரு இடத்திற்கு குலாம் நபி ஆசாத் மற்றும் முகுல் வாஸ்னிக் இருவர் பெயர் பரிசீலிப்பதாகத் தெரிகிறது.