திமுகவினர் எனக்குதான் ஓட்டு போடுவாங்க... தேர்தலில் திமுக காலி... டாப் கியரில் பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணன்..!
மதுரை வடக்கு தொகுதியில் திமுகவினரும் எனக்குதான் வாக்களிப்பாளர்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்கும் என பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன், பாஜகவில் இணைந்தார். உடனே மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட பாஜக டாக்டர் சரவணனுக்கு வாய்ப்பளித்தது. திமுகவிலிருந்து வந்த சரவணனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதால், பாஜகவினர் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் மதுரையில் டாக்டர் சரவணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏவாக 2 ஆண்டுகள் இருந்தேன். முருகப் பெருமானை கருப்பர் கூட்டம் இழிவுபடுத்தியது எனக்கு வருத்தமாக இருந்தது. அப்போது அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.
இதைக் கண்டிக்க வேண்டும் என தலைமையிடம் நான் வலியுறுத்தினேன். அதன்பிறகு திமுகவில் சின்ன சின்ன நெருடல்கள் ஏற்பட்டு, அது தற்போது வெடித்துள்ளது. பாஜகவில் நான் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக திமுகவினர் பொய் சொல்கிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் நான் பாஜகவில் இணைந்தேன். சிறப்பான எம்.எல்.ஏ. என்ற பெயரைப் பெற்றுள்ளேன். பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வழங்கியிருக்கிறேன். மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி மையம் நடத்தி வருகிறேன். இதனால்தான் பாஜக என்னை வேட்பாளராக அறிவித்தது.
பாஜகவில் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. எல்லோரும் ஒன்றாகவே பணிபுரிந்து வருகிறோம். திமுகவில் உள்ள என் ஆதரவாளர்கள் விரைவில் பாஜகவில் இணைவார்கள். நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அதிமுகவினர் ஏற்றுள்ளனர். திமுகவினரும்கூட எனக்குதான் வாக்களிப்பாளர்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை அமைக்கும்” என்று சரவணன் தெரிவித்தார்.