”உடனடியாக பேரவையை கூட்டுங்கள்” - கேப் பார்த்து கிடா வெட்டும் ஸ்டாலின்...
டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் நம்பிக்கையை இழந்துவிட்டதாக அறிவித்துள்ள நிலையில், உடனடியாக சட்டப்பேரவையை கூட்டுங்கள் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தன. பேச்சுவார்த்தைக்கு பிறகு தலைமை அலுவலகம் சென்ற ஒபிஎஸ் அங்கு எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து ஒன்றாக இணைந்ததாக அறிவித்தார்.
மேலும் அங்கு ஒபிஎஸ்க்கு துணை முதலமைச்சர் பதவியும், கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.
இதைதொடர்ந்து சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என வைத்தியலிங்கம் எம்.பி தெரிவித்தார்.
இதையடுத்து டிடிவி தினகரனுக்கு தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இதைதொடர்ந்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் அவரை மாற்ற வேண்டும் எனவும் தனித்தனியாக கோரிக்கை விடுத்தனர்.
இதைதொடர்ந்து 19 எம்.எல்.ஏக்களும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரே ஓட்டலில் தங்கியுள்ளனர்.
இதனால் எடப்பாடிக்கு ஆதரவு எம்.எல்.ஏக்கள் 116 பேராகவும், எதிர்ப்பு எம்.எல்.ஏக்கள் 117 ஆகவும் உள்ளது.
இந்நிலையில், உடனடியாக சட்டப்பேரவையை கூட்டுங்கள் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.