வியூகம் வகுத்த பிரசாந்த் கிஷோருக்கு இத்தனை கோடியா..?? கசிந்தது திமுகவின் வருடாந்திர தணிக்கை அறிக்கை.
அந்த அறிக்கையின் படி, தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் ஆலோசகர்களுக்கு 69 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்திற்கு 69 கோடி ரூபாயை திமுக செலவு செய்திருப்பது அதன் மூலம் தெரிய வந்துள்ளது.
நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆலோசகர்களுக்கு 69 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டதாக திமுகவின் வருடாந்திர தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல் சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது. அப்படி என்றால் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோரின் I-PAC நிறுவனத்திற்கு 69 கோடி ரூபாய் செலவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
அரசியல் சதுரங்கத்தில் சாணக்கியன்.. தேர்தல் ராஜதந்திரி என பல வகையில் புகழப்படுபவர் பி.கே எனப்படும் பிரசாந்த் கிஷோர். பஞ்சாப், டெல்லி, ஆந்திர பிரதேசம், என்று பல மாநிலங்களில் இப்போது ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகளின் வெற்றிக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தவர்தான் இந்த பிரசாந்த் கிஷோர். 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி வெற்றி பெற்றபோது அந்த அலை உருவாக பின்னணியிலிருந்து பிரச்சாரம் வியூகம் வகுத்து கொடுத்தவர் இவர்தான் என்றும் சொல்லப்படுகிறது. 1977ல் பீகார் மாநிலத்தில் பிறந்தவர் அவர் உலக பொதுச் சுகாதாரத் துறையில் ஆய்வாளராகப் பணியைத் தொடங்கியவர் ஆவார். ஐநா சபையில் 8 ஆண்டுகள் பணியாற்றி விட்டு இந்தியா திரும்பிய இவர், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசனை செய்யும் பணியை தொடங்கினார். 2012ஆம் ஆண்டு குஜராத் தேர்தலில் மோடியின் வெற்றிக்காக பிரச்சாரத்திற்கு திட்டம் வகுத்துக் கொடுத்தார்.
சமூக வலைதள பிரச்சாரம், கவர்ச்சி அறிவிப்புகள் என புதுமையான ஆலோசனைகளை வழங்குவதில் வல்லவராக அறியப்பட்டார், அதனால் குஜராத் மாநில முதல்வராக 3வது முறையும் மோடி வெற்றி பெற காரணமாகவும் இருந்தார் பிரஷாந்த் கிஷோர் எனக் கூறப்பட்டது. பிரதமர் மோடியுடன் அதிக நெருக்கம் பாராட்டி வந்த இவர், கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பிரதமர் ஆவதற்கான பிரச்சாரங்களை செய்ய தொடங்கினார். அதன் எதிரொலியாக அந்த தேர்தலில் பெரும்பான்மையுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது. அதைத்தொடர்ந்து அரசியல் உலகில் பி.கே என பிரபலமானார் பிரசாந்த் கிஷோர். 2015ஆம் ஆண்டு பாஜகவின் நட்பில் இருந்து விலகிய அவர், இந்தியன் பொலிடிக்கல் ஆக்சன் கமிட்டி (ஐபேக்) என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு, தனிநபர்களுக்கு, தேர்தல் வியூகங்களை வழங்கும் பணியை செய்து வந்தது. இதற்கு கட்டணமாக சுமார் 150 கோடி வரை வசூலிக்கபடுவதாக தகவல்கள் வெளியானது.
அதைத்தொடர்ந்து 2015இல் பீகார் மாநிலம் நிதிஷ்குமார் வெற்றிக்கு உதவினார் பிரசாந்த். 2016 பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸின் வெற்றிக்காக பணியாற்றினார், 2019 ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் ஜெகன்மோகன் ரெட்டிக்கு வியூகம் அமைத்துக் கொடுத்தார் பிரசாந்த் கிஷோர். 2017இல் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு பணியாற்றினார், ஆனால் இவரது வியூகம் அங்கு எடுபடவில்லை. அதைத்தொடர்ந்து 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வியூகம் அமைக்கும் பணியில் இறங்கினார் பிரசாந்த் கிஷோர். பல அரசியல் கட்சிகள் தங்களுக்கு வியூகம் அமைத்து கொடுக்க வேண்டும் என பிரசாந்த் கிஷோரை நாடின ஆனால் அவர் திமுகவை தேர்ந்தெடுத்துக் கொண்டார். திமுகவிடம் கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டு வியூகம் அமைத்து வருகிறார், என்பதே அப்போது பேசுபொருளானது, அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள் பேசி வளர்த்த திமுகவை ஸ்டாலின் பிரசாந்த் கிஷோர் என்னும் வட மாநிலத்தவரிடம் அடமானம் வைத்து விட்டார் என அதிமுக திமுகவை கடுமையாக விமர்சித்தது.
தன் மீது நம்பிக்கை இல்லாத ஸ்டாலின் பி.கேவுக்கு கோடிகளை கொட்டிக் கொடுக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தது. அதேபோல், சுயமாக சிந்திக்க தெரியாதவர்கள் பிரசாந்த் கிஷோர் மற்ற கட்சிகளின் வியூகங்களை காப்பியடித்து இன்னொரு கட்சிக்கு வழங்குபவர்தான் அவர், வெற்றி அலை எந்த பக்கம் வீசுகிறதோ அந்தக்காட்சியை தேர்ந்தெடுத்துக் கொண்டு தன்னை வெற்றியாளராக காட்டிக் கொள்ளும் போலி அவர் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளிப்படையாகவே அவரை கடுமையாக விமர்சித்தனர். ஆனால் ஒருவழியாக திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில்தான் திமுகவின் வருடாந்திர தணிக்கை அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு எவ்வளவு நிதி செலவு செய்யப்பட்டது, யார் யாருக்கெல்லாம் எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது.
அந்த அறிக்கையின் படி, தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் ஆலோசகர்களுக்கு 69 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்திற்கு 69 கோடி ரூபாயை திமுக செலவு செய்திருப்பது அதன் மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது பிரசாந்த் கிஷோர் நிறுவனத்திற்கு அதிக பணம் செலவு செய்யப்பட வேண்டி இருப்பதால், ஐபேக் நிறுவனத்துடன் உறவை முறித்துக் கொள்ள திமுக முடிவு செய்திருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் திமுகவின் வருடாந்திர தணிக்கை அறிக்கையில் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் பொது பிரச்சாரம் மேற்கொண்டதற்காக வாகனச் செலவு 1,63,43,816 செலவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது நட்சத்திர பேச்சாளர்களுக்காக 77,93,588 செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
பிரச்சாரத்திற்காக தொலைக் காட்சி மற்றும் அச்சு ஊடகங்களுக்கு 56,69,98,297 செலவு செய்யப்பட்டதாகவும், குறுஞ்செய்தி விளம்பரத்திற்கு ரூ. 10,74,438 , கேபிள் டிவி சேனல்களுக்கு 37,11,48,929, இணையதளங்களுக்கு 18,94,60,292, அதேபோல் பேனர், சுவர் விளம்பரம் ,பொதுக்கூட்டங்கள் போன்றவற்றை நடத்துவதற்கு 7,68,290, அதேபோல் தேர்தல் வியூககர்களுக்கு 69,00,00,000 வழங்கப்பட்டதாகவும், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கான நிதி 48,75,00,000 வழங்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.