ஆனால் திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் அதே தேதியில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் தேதி வெளியானதால் அரசியல் கட்சி தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தையில் வேகமாக ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டி.ஆர்.பாலு தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது திமுக.

திமுகவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆனால் திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளை கேட்டு வரும் நிலையில், 20 - 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாம். இதனால் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகமல் உள்ளது.

காங்கிரஸ் கட்சியுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை திமுக இன்று நடத்தியது. இதற்கு முன்னதாக, கடந்த 26-ம் தேதி தமிழக காங்கிரஸ் கட்சி மேலிடப் பொறுப்பாளர் குண்டு ராவ், உம்மன்சாண்டி, சந்தீப்சிங் சுர்ஜிவாலா உள்ளிட்ட தேசியத் தலைர்கள் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது முடிவு எட்டப்படவில்லை. இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி, கோபன்னா ஆகியோர் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை முடித்து திரும்பி வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சு சுமூகமாக இருந்தது. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் நாளை அல்லது நாளை மறுநாள் கையெழுத்தாகும் என தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது என்பதை தெளிவாக கூறிவிட்டதாகவும், விரைவில் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பரப்புரை மேற்கொள்வது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
