அமமுக - தேமுதிக கூட்டணி!! தினகரனுடன் ரகசிய டீல் பேசும் சுதீஷ்... எச்சரிக்கும் மா.செ.க்கள்!!
தினகரனின் அமமுக தேமுதிக உடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில், இறங்கியுள்ளதால் மாவட்ட செயலாளர்கள் இப்போதே போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பிஜேபி கூட்டணியில், தேமுதிக, போட்டியிட்டது. கூட்டணிக்கு, பிஜேபி தலைமை வகித்தாலும், அதிக தொகுதிகளில் போட்டியிட்டு, படுதோல்வி அடைந்தது. இதைதொடர்ந்து, மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து, 2016 சட்டசபை தேர்தலை, தேமுதிக., சந்தித்தது. இந்த தேர்தலிலும், மற்ற கட்சிகளை காட்டிலும், தேமுதிக, அதிக தொகுதிகளில் நின்றது, ஆனாலும் படுதோல்வியை சந்தித்ததுடன், தங்களது கைவசமிருந்து வாக்கு வங்கியையும், கணிசமாக இழந்தது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற இக்கட்டான சூழலில் உள்ளது. இதிலும் தவறான முடிவை எடுத்தால், கட்சி காணாமல் போய்விடும் என, அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அச்சத்தில் உள்ளனர். தேமுதிக,வுடன் கூட்டணி அமைப்பதற்கு, பிஜேபி தலைமை விரும்புகிறது. அதிமுகவினரும் ரகசிய பேச்சு நடத்தி வருகின்றனர். ஆனால், வழக்கம் போல, ஆதாயத்தை மனதில் வைத்து, தேமுதிக, தலைமையில் கூட்டணி அமைப்பதற்கு, பிரேமலதா பிளான் போடுகிறார்.
இதற்காக, தந்து தம்பி சுதீஷ் மூலமாக அமமுக,வுடன் ரகசிய கூட்டணி பேச்சை, அவர் துவக்கியுள்ளார். விஜயகாந்த், அறுவை சிகிச்சை முடிந்து, அமெரிக்காவில் ஓய்வில் உள்ளதால், கட்சி பணிகள் தொடர்பாக, எந்த தகவலையும், அவருக்கு தெரியப்படுத்துவதில்லை. ஆனால், கூட்டணிக்கு, அமமுக, தான் தலைமை வகிக்கும் என்பதில், தினகரன், பிடிவாதமாக இருப்பதாக தெரிகிறது. இதனால், கூட்டணி பேச்சில், இழுபறி நீடிக்கிறதாம்.
இதற்கிடையில், தேமுதிக, - அமமுக, கூட்டணியால், வெற்றிக்கு வாய்ப்பில்லை. அதிமுக, ஓட்டுகளை பிரிப்பதற்கு மட்டுமே, இது வழிவகுக்கும்; திமுகவின் வெற்றிக்கு தான் உதவும் என, தேமுதிகவினர் மத்தியில் பேச்சாக உள்ளது. எனவே, கூட்டணி முடிவை பரிசீலிக்க வேண்டும் என, தேமுதிக, மாவட்ட செயலர்கள் சிலர், இப்போதே போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
பிஜேபி அல்லது, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது மட்டுமே, இப்போதைக்கு சரியாக இருக்கும் என நேரடியாகவே கட்சி தலைமைக்கு போன் போட்டே சொல்லி வருகின்றனர்.