நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல், வரதட்சனைக் கொடுமைகள் அதிகரித்து வருவதால் பெண்களின் திருமண வயதுக்குறித்து தெளிவான முடிவினை மத்திய அரசு எடுக்க வேண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக இருக்கிறது. ஆண்களுக்கு 21ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின்போது பேசிய பிரதமர் மோடி, "மகள்கள் மற்றும் சகோதரிகளின் உடல்நலம் குறித்து அரசு அக்கறை கொண்டுள்ளது.ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மகள்களை பாதுகாக்க அவர்கள் சரியான நேரத்தில் திருமணம் செய்து கொள்வது அவசியம். பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்" என்று கூறியிருந்தார்.

இதையடுத்து ஜெயா ஜெட்லி தலைமையில் நிதி ஆயோக் சிறப்பு குழு அமைக்கப்பட்டு பெண்களின் திருமண வயதை மறு நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்தக்குழு பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21ஆக உயர்த்த பரிந்துரை செய்தது.இந்த நிலையில் பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்று தற்போது ஒப்புதலும் அளித்துள்ளது.

இந்த திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதையடுத்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா பாராளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யவுள்ளது. பின்னர் அது சட்டமாக அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக அதிகரித்ததற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பல தலைவர்களும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பெண்ணின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தேமுதிக வரவேற்கிறது. இதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பில் பெண்கள் முன்னேற்றம் அடைவதுடன், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்கள் பக்குவம் அடைவார்கள். சுயமாக சிந்தித்து எதிர்கால வாழ்க்கையை அவர்களால் சுமூகமாக வழி நடத்திட முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், வரதட்சனைக் கொடுமைகள், விவாகரத்துகள் தற்போது அதிகரித்து வருவதாகவும், அவர்களை பாதுகாக்கும் பொருட்டு கிராமப்புற மக்கள் 18 வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்ய விரும்புகின்றனர். இளம் பெண்களை வீட்டில் வைத்துக் கொண்டு காலம் தாழ்த்த கிராமப்புற மக்கள் விரும்புவதில்லை. எனவே பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் விவகாரத்தில் மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்த பின்னர் மத்திய அரசு அரசாணை வெளியிட வேண்டும்.

மேலும் இந்த விவகாரத்தில் கோடிக் கணக்கான பெண்களின் வாழ்க்கை அடங்கி உள்ளதால் மத்திய அரசு தீர்க்கமான நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஓட்டுரிமை 18 வயது திருமணத்திற்கு 21 வயதா? என்கின்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. அதேபோல் ஆண்களுக்கான திருமண வயது 21 தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே ஆண்களுக்கான வயது வரம்பில் மாற்றம் வருகிறதா? என்பது குறித்தும் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்' என்று கேட்டு கொண்டுள்ளார்.