2 ஆடு, 2 பெட்டி, 2 மாடு வைத்திருப்பவருக்கு எதற்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு.. அண்ணாமலையை விளாசிய பிரேமலதா
விருதுநகரில் பாலியல் வன்கொடுமை, சொத்து வரி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமை வகித்து ஆர்ப்பாட்டம் செய்தார்.
சொத்து வரி உயர்வு :
அப்போது பேசிய அவர், 'விருதுநகரில் நடந்த பாலியல் வன்கொடுமையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி தர வேண்டும். குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள். பெட்ரோல், டீசல், காஸ், டோல், மின் கட்டணம் என அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு தற்போது தான் மக்கள் இயல்பு நிலைக்கு வந்துள்ளனர். இந்த சூழலில் விலைவாசி உயர்வு சிரமப்படுத்துகிறது.
திமுக கொடுத்த பொய் வாக்குறுதிகள் :
பெண்களுக்கு ரூ. ஆயிரம், நகை கடன் தள்ளுபடி, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் வசதி என பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்து மக்கள் மீதே சுமையை சுமத்துகின்றனர். சொத்து வரி உயர்வை மக்கள் தாங்கமாட்டார்கள்.ஸ்டாலின் துபாய், லண்டன் என சுற்றுப்பயணம் செல்கிறார். குடும்பத்தை வளர்க்கிறார். மக்களை கைவிட்டு விடுகிறார். துபாய் விமான நிலையத்தில் உதய நிதி வரவேற்கிறார். எக்ஸ்போவில் சபரீசன் வரவேற்கிறார். அப்படியென்றால் ஏன் மக்களுக்கு சந்தேகம் வராது.
அண்ணாமலைக்கு எதற்கு பாதுகாப்பு :
வரவேற்பை துபாய் அதிகாரிகள் அளிக்காமல் ஏன் குடும்பத்தார் அளித்தனர். இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புள்ளிவிவரங்கள், ஆதாரங்களோடு குற்றம் சாட்டி உள்ளார். மக்கள் வரிப்பணத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ரெண்டு ஆடு, ரெண்டு பெட்டி, ரெண்டு மாடு வைத்திருப்பவருக்கு எதற்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு. தைரியமிருந்தால் அந்த பாதுகாப்பு வேண்டாமென மத்திய அரசுக்கு அவர் கடிதம் எழுத வேண்டியது தானே.
திமுகவிற்கு திராணி இருந்தால் உண்மையை பேசி தெளிவுபடுத்த வேண்டும். சொத்துவரி உயர்வுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதல் என அமைச்சர் நேரு கூறுவதற்கு அண்ணாமலை உரிய பதில் அளிக்க வேண்டும். பாகிஸ்தான் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள பிரச்னைகளை பிரதமர் மோடி தீர்க்க வேண்டும். திமுக கை விட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும்’ என்று பேசினார்.