எடப்பாடியாருக்கு மட்டுமல்ல ஸ்டாலினுக்காகவும் உதவிக்கரம் நீட்டிய கேப்டன்... விஜயகாந்தின் அசத்தல் அறிவிப்பு...!
கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் போது, நோயாளிகளுக்காக ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்திருந்தேன்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் வேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 28,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 80 ஆயிரத்து 259 பேர் ஆகும். நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், படுக்கை வசதிகள், கொரோனா மருந்துகள் ஆகியவற்றின் தேவையும் அதிகரித்து வருகிறது.
கடந்த முறை கொரோனா கோரதாண்டவத்தின் போது திருமண மண்டபங்கள், தனியார் கல்லூரிகள் உள்ளிட்டவை அனைத்தும் நோயாளிகளுக்கான சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன. இந்த முறையும் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மையங்களை அமைக்க பல்வேறு தனியார் தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.
திருமண மண்டபங்களை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்ற அரசு முடிவெடுத்தால் தன்னுடைய திருமண மண்டபம் பொன்மணி மாளிகையை தந்து தன்னால் உதவ முடியும் என முதன் முதலில் கவிஞர் வைரமுத்து அறிவித்தார். அவரைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய இடவசதி இல்லாத சூழ்நிலை உள்ளது.எனவே, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை தாராளமாக பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்துள்ளேன்" எனக்குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் போது, நோயாளிகளுக்காக ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்திருந்தேன். அதேபோல் இந்த ஆண்டும் ஆண்டாள் அழகர் கல்லூரியை வழங்குவதோடு, இது தொடர்பாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.