எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து பாஜக தலைவர் அமித்ஷாவுடன் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி குறித்து பேசப்பட்டு வரும் நிலையில் தேமுதிக தனி ஆவர்த்தனம் செய்து வருவது எடப்பாடி தரப்பை டென்ஷனாக்கியுள்ளது.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டணியில் மதிமுக, இடது சாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதே போல் அதிமுக – பாஜக- பாமக கட்சிகள் இணைந்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் தேமுதிக இடம் பெறும் என்றும் அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

பாமக மற்றும் தேமுதிக கட்சிகளை மெகா கூட்டணிக்குள் கொண்டு வர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்கென அவர் தனி கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி என்பதைவிட பாமக, தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க இபிஸ் தனது நெருக்கமாக அமைச்சர்கள் மூலம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் தேமுதிக சார்பில் கூட்டணி பேச்சு வார்த்தைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் குழு அதிமுகவுடன் பேச்சு நடத்தாமல் பாஜக தலைவர் அமித்ஷாவுடன் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிகவின் குழு தற்போது கூட்டணி குறித்து அமித்ஷாவுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் அது குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை அமெரிக்காவில் உள்ள விஜயகாந்துக்கு தகவல் தெரிவிப்பதாகவும் சுதீஷ் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தங்களது தலைமையில் தான் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை அதிமுக கொண்டுள்ள நிலையில் தேமுதிக தனி ஆவர்த்தனம் செய்து வருவது எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.