உடல்நலமில்லாமல் இருக்கும் திவாகரன் பேசுவதை கண்டுகொள்வதில்லை! அவர் மீது நாங்கள் பிரியமாகத்தான் இருக்கிறோம்! டிடிவி தினகரன்
உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் திவாகரன் பேசுவதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றும் அவர் மீது நாங்கள் பிரியமாகத்தான் இருக்கிறோம் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சசிகலாவின் சகோதரிமகன் டி.டி.வி.தினகரன் மற்றும் சகோதரர் திவாகரன் இடையேயான மோதல் வெட்டவெளிச்சமாகி உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஏற்க முடியாது என திவாகரன் கூறியுள்ள நிலையில், கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் உறவினர்கள் என்றால் கூட தூக்கி எறிந்து விடுவேன் எனடி.டி.வி.தினகரன் எச்சரித்துள்ளார்.
அதிமுக உள்கட்சி பிரச்னையில் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இணைந்த அணிக்கு இரட்டை இலையும், கட்சி பெயரும் கிடைத்த நிலையில் சசிகலாவின் சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். அவருக்கும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் குடும்பத்திற்குமான மோதல் தற்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது. அண்மையில் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் தனது பேஸ்புக் பதிவில் மாபெரும் தவறுகளை பொறுத்துக் கொண்டிருப்பதாகவும், இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு கலைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், சசிகலா அவர்கள் டி.டி.வி.தினகரனையும். வெங்கடேசையும் தனது இரு கண்கள் போல் நினைத்தார். ஆனால் அவர்கள் இருவரும் சேர்ந்து சசிகலாவுக்கு முதலமைச்சர் மற்றும் பொதுச் செயலாளர் ஆசை காட்டி ஏமாற்றி விட்டனர் என்றார். சசிகலா சிறைக்கு செல்ல காரணமே டி.டி.வி.தினகரன்தான் என்றும் குற்றம்சாட்டிய திவாகரன், இன்னும் 6 மாதத்தில் அவர் தனிமரமாக நிற்பார் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் டிடிவி தினகரன், உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் திவாகரன் பேசுவதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்று கூறியுள்ளார். எங்கள் மேல் அவருக்கு பிரியம் இல்லை என்றாலும், நாங்கள் அவர் மீது பிரியமாகத்தான் இருக்கிறோம் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.