சேலத்தை இரண்டாகப் பிரிங்க... மேட்டூரை புதிய மாவட்டமாக அறிவியுங்கள்.. சட்டப்பேரவையில் பாமக திடீர் கோரிக்கை.!
சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, மேட்டூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் துறை, கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று மேட்டூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “சேலம் 11 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய பெரிய மாவட்டமாக உள்ளது. இதை இரண்டாகப் பிரிக்க வேண்டும். எனவே, மேட்டூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.
மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, அந்தியூர் உள்பட 5 தொகுதிகளை உள்ளடக்கி இந்தப் புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். அதிக பரப்பளவு கொண்ட மேட்டூரிலிருந்து சேலம் செல்ல 2 மணி நேரம் ஆகிறது. எனவே, நிர்வாக வசதிக்காக மேட்டூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.” என்று எம்.எல்.ஏ. சதாசிவ பேசினார்.