அதிமுகவை ஆட்டிப்படைக்கும் 4 பேர்... ஒற்றைத் தலைமை தேவை என திவாகரன் வாய்ஸ்!
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று ராஜன் செல்லப்பா கூறியிருப்பது சரியானதுதான். அவரை போலவே அதிமுகவில் பல எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் மனக்கசப்பில் இருக்கிறார்கள்.
அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள மனக்கசப்புக்கு 4 தமிழக அமைச்சர்கள்தான் காரணம் என்று அண்ணா திராவிட கழக பொதுச்செயலாளர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழக கட்சியின் 2-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. கட்சி அலுவலகத்தில் கொடியேற்றிவைத்த திவாகரன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அபோது அவர், “ஜெயலலிதா விரும்பாத பாஜக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுடன் அதிமுக கூட்டணி வைத்தது. அதனால், தேர்தலில் அதிமுக மிக பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியால் கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதியில்கூட அதிமுகவை வெற்றி பெற வைக்க முடியவில்லை. தன் தோல்வியை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிமுக வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
அமமுகவை நடத்திவரும் தினகரன் ஓர் அரசியல் கோமாளி. தன் சுயநலத்துக்காக தமிழக அரசியல் குட்டையைக் குழப்பி கொண்டிருந்தார். இந்தத் தேர்தலில் மூட்டைப் பூச்சியை நசுக்குவதைப்போல மக்கள் அவரை நசுக்கி எறிந்துவிட்டார்கள். அவரை நம்பி சென்றவர்கள், பலிக்கடாவாகிவிட்டார்கள். அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று ராஜன் செல்லப்பா கூறியிருப்பது சரியானதுதான். அவரை போலவே அதிமுகவில் பல எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் மனக்கசப்பில் இருக்கிறார்கள்.
குறிப்பாக தமிழக அமைச்சர்கள் 4 பேர் அதிமுக அரசை ஆட்டி படைப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். ஒற்றை தலைமை பிரச்னை குறித்து விவாதிக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும். தொண்டர்களின் கருத்தை உள்வாங்கி முடிவெடுக்க வேண்டும்.” என்று திவாகரன் தெரிவித்தார்.