divakaran press meet in mannarkudi

எங்கள் உயிர் இருக்கும்வரை இது போன்ற வருமான வரி சோதனைகள் மூலம் எங்களை பணிய வைக்க முயற்சி செய்ய நினைத்தால் அது நடக்காது என சசிகலாவின் சகோதரர் திவாகரன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ஜெயா தொலைக்காட்சி, நமது எம்ஜிஆர் மற்றும் சசிகலாவின் உறவினர்கள் உள்ளிட்ட 187 இடங்களில் கடந்த 9 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னையில் இளவரசியின் மகன் விவேகின் ஜாஸ் சினிமாஸ், அவரது வீடு, அலுவலகங்கள், கிருஷ்ணப்பிரியாவின் தியாகராயநகர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமான சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதே போன்று மன்னார்குடியில் வசித்து வரும் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு, கல்லூரி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. அப்போது வைர, தங்க நகைகள் கிலோ கணக்கில் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து இன்று திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் திவாகரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாள்களிடம் பேசிய திவாகரன், வருமான வரித்துறை சோதனையின்போது அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தாக தெரிவித்தார்.

தங்கள் தரப்பை மிரட்டிப்பார்க்கவே இந்த சோதனைகள் நடைபெற்றதாகவும், இது போன்ற செயல்கள் மூலம், தங்களை அச்சுறுத்த முடியாது என்றும், தங்கள் உயிர் உள்ளவரை வருமான வரி சோதனைகள் மூலம் எங்களை பணிய வைக்க முடியாது என்றும் திவாகரன் தெரிவித்தார்.