நெருங்கும் தேர்தல்... அதிமுகவில் தொடர்ந்து மாவட்டங்கள் பிரிப்பு... அதிரடி காட்டும் ஈபிஎஸ்-ஓபிஎஸ்..!
அதிமுகவில் திருப்பூர், புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகளை கட்சி தலைமை நியமித்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், அதிமுகவில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் தொடர்ந்து நியமிக்கப்பட்டுவருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர், புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. புதிய மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாநகர் அதிமுக செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் எம்.பி சி.மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக வைத்தியலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவின் அமைப்பு செயலாளராக எம்.எஸ்.எம் ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக கமலக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நூர்ஜஹான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.