நாளை முதல் மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன் வினியோகம்.. மாநகர் போக்குவரத்து கழகம் தகவல்.
இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் பொருட்டு அவர்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யும் போது மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் 15-2-2021 அன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:
மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டமானது மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கடந்த 20-2-2016 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, அவரது பிறந்த தினமான 24-2-2016 அன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள் 60 வயது நிறைவு மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றின் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் அனுகி, மாதம் ஒன்றுக்கு 10 டோக்கன்கள் வீதம் மூன்று மாதங்களுக்கு பயன் படுத்துகின்ற வகையில் கட்டணமில்லா பயனர் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன.
மூத்த குடிமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டத்தில் வாயிலாக, கடந்த 30-1-2021 வரையில், ஏறத்தாழ 3,51,617 நபர்கள் பயன் அடைந்துள்ளார்கள், கடந்த ஆண்டு மார்ச் திங்களில் ஏற்பட்ட கொரோனா நோய் தொற்று காரணமாக அத்தியாவசிய பணிகள் தவிர பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டன, நோய்களின் தீவிரத்தை கட்டுப்படுத்துகின்ற வகையில் 60 வயதிற்கு மேற்பட்டோர் வீட்டிலேயே இருத்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் அரசால் விதிக்கப்பட்டன, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான இந்த அரசு மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கையின் காரணமாக கொரோனா தொற்று பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்களுக்கான பேருந்து சேவைகள், 100 சதவீத இருக்கைகளுடன் இயங்கவும் அனுமதிக்கப்பட்டு, தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் பொருட்டு அவர்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, இத்திட்டத்தின் மூலம் மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை பெற்றுள்ளோர் மற்றும் புதிதாக பெற விரும்பும் தகுதி வாய்ந்த மூத்த குடிமக்கள், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இந்த டோக்கன்களை நாளை 15-2-2021 முதல் உங்கள் இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள மையங்களில் பெற்றுக்கொள்ளலாம், அலுவலக நாட்களில் காலை 8 மணி தொடங்கி இரவு 7:30 மணி வரையிலும் மாதம் ஒன்றுக்கு 10 வீதம் பிப்ரவரி முதல் ஜூலை வரை ஆறு மாதங்களுக்கான டோக்கன்கள் வழங்கப்படும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.