நண்பரின் மனைவி கட்சியை விட்டுப்போனதால் அதிருப்தி... கமல்ஹாசன் காட்டமான பேச்சு..!
'கட்சியில் தலைவர்களை தேடிக்கொண்டிருக்கிறேன். அந்தத் தகுதிகள் இல்லாதவர்களை நீக்கவேண்டியது எனது கடமையாகவும் இருக்கிறது’ என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
'கட்சியில் தலைவர்களை தேடிக்கொண்டிருக்கிறேன். அந்தத் தகுதிகள் இல்லாதவர்களை நீக்கவேண்டியது எனது கடமையாகவும் இருக்கிறது’ என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் நாசரின் மனைவியான கமீலா நாசர் , தொடக்கம் முதலே மக்கள் நீதி மய்யத்தில் பணியாற்றி வந்தவர். சென்னை மண்டல மாநிலச் செயலாளராக இருக்கும் அவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு 92000 வாக்குகளை பெற்றிருந்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் மற்றும் மதுரவாயில் ஆகிய இரு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததாகவும் ஆனால், வாய்ப்பு தரப்படாததால் அதிருப்தியில் இருந்த கமீலா நாசர் சில வாரங்களுக்கு முன்பே மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை தலைமை அலுவலகத்தில் அளித்திருந்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் அவருடைய விலகல் கடிதத்தை ஏற்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கமீலா நாசர் நீக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ஆம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன் சிறப்பு நிகழ்வையொட்டி ‘உள்ளாட்சியில் தன்னாட்சி’என்ற தலைப்பில் இன்று நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் இணையவழி கருத்தரங்கில் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “தகுதி இல்லாதவர்களை கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்பது முக்கியமான ஒன்று. கட்சியில் தலைவர்களை தேடிக்கொண்டிருக்கிறேன். அந்தத் தகுதிகள் இல்லாதவர்களை நீக்கவேண்டியது எனது கடமையாகவும் இருக்கிறது. விமர்சனங்களுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது. ஆட்சி என்பது கோட்டைக்குள் மட்டுமே செய்யும் விஷயம் அல்ல” என்று பேசியுள்ளார்.
தனது நெருங்கிய நண்பர் நாசரின் மனைவி கட்சியில் இருந்து அதிருப்தியாகி கிளம்பியதால் அதனை மனதில் வைத்து கமல்ஹாசன் இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது.