ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் கோளாறு..!! பழைய ஸ்மார்ட் கார்டு முறையில் பொருட்களை வழங்க முடிவு.
தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட பின்பு பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் பொருட்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் பழைய ஸ்மார்ட் கார்டு முறையில் பொருட்களை வழங்க அறிவுறித்தப்பட்டுள்ளது. கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின்கீழ் பயோமெட்ரிக் முறையில் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் பயோ மெட்ரிக் முறையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரேசன் பொருட்களை வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது. இதனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பணியாளர்களுக்கும் வாக்குவாதமும், அங்கங்கே ஆர்ப்பாட்டங்களும் கூட நடைபெற்றது. இந்தநிலையில் 14ஆம் தேதி மென்பொருள் சரிசெய்யப்பட்டு பயோமெட்ரிக் முறையில் எவ்வித சிரமும் இல்லாமல் பொருள்கள் வழங்கப்படும் என உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் தெரிவித்திருந்தார்.ஆனால் பயோமெட்ரிக் முறையில் தொழில்நுட்ப கோளாறால் தொடர்ந்து பொருட்கள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து ஒன்றாம் தேதிக்கு முன்பாக கடைப்பிடிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு மூலமாக பொருட்களை வழங்குவது தற்காலிகமாக தொடரும் என தீர்மானிக்கப்பட்டு ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட பின்பு பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.