பெரியார் சிலையை உடைத்த பாஜக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் - தமிழிசை அதிரடி
திருப்பத்தூரில் பெரியார் சிலையை சேதப்படுத்திய பாஜக நகர செயலர் முத்துராமனை கட்சியிலிருந்து நீக்கி அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி புரிந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில், பாஜக தொண்டர்கள் திரிபுராவில் அமைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றினர். லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதைப் போல், தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதற்கு தமிழகத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றினைந்து ஹெச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து ஹெ.ராஜா அந்த பதிவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கினார். ஆனாலும் கண்டனங்கள் வலுத்தன.
பின்னர், திருப்பத்தூரில் பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. சிலையை சேதப்படுத்திய பாஜக நகர செயலாளர் முத்துராமனை போலீஸ் கைது செய்தனர்.
இதைதொடர்ந்து இன்று தனது டுவிட்டரில் பக்கத்தில் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
வன்முறைக்கு எந்த வகையிலும் வழிவகை செய்யக்கூடாது என்பதே பாஜகவின் நிலை எனவும் ஹெச்.ராஜா தனது பதிவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் பாஜகவின் தமிழிசை தெரிவித்திருந்தார்.
தலைவர்கள், சிலைகளை அவமதிக்கும் வகையிலான நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், திருப்பத்தூரில் பெரியார் சிலையை சேதப்படுத்திய பாஜக நகர செயலர் முத்துராமனை கட்சியிலிருந்து நீக்கி அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.