தமிழக போலீஸார் பாரபட்சமாக நடந்தால், கலவர சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இந்துகள் மனதில் வந்துவிடும் என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார். 

தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையை நீதிமன்றமே முடிவு செய்திருக்க வேண்டும். ஆனால், இந்த முடிவை ஆளுநரிடம் தள்ளிவிட்டது தேவையற்றது. இந்தப் பிரச்னையை வைத்து திமுகவும் காங்கிரஸும் கண்ணாமூச்சி விளையாடுகின்றன. 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்கிறது திமுக. ஆனால் காங்கிரஸ் விடுவிக்கக்கூடாது எனக் கூறுகிறது. இதில் இந்த இரு கட்சிகளும் கூட்டு சதி செய்கின்றன. முதலில் இரு கட்சிகளும் ஒரே கருத்துக்கு வர வேண்டும்.
அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும்தான் முடிவு செய்ய வேண்டும். இதுவரை சசிகலா தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஆனால், இதில் ஊடகங்கள் ஏன் கவலைபடுகின்றன என்றுதான் தெரியவில்லை. அதைப் பற்றி பேசுவதும் விவாதிப்பதும் தேவையற்றது. ஊடகங்கள் ரஜினியை இப்படித்தான் மிகைப்படுத்தின. ரஜினி அரசியலுக்கு வராதது போல சசிகலாவும் வருவாரா, மாட்டாரா எனப் பொறுத்திருந்து பாருங்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


இந்து மதத்தை இழிவாகப் பேசிய வைரமுத்துவை தமிழக போலீஸார் கைது செய்யவில்லை. ஆனால், கல்யாணராமனை கைது செய்துள்ளது. மற்றவர்கள் கூறுவது போல தமிழக அரசு பாஜகவின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் வைரமுத்துவை கைது செய்திருக்கும். கல்யாணராமனை கைது செய்திருக்காது. தமிழகத்தில் இந்துக்கள் மீதுள்ள பாரபட்சத்தை ஏற்க முடியாது. இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் கண்டிக்கவும் கட்டுப்படுத்தவும் போலீஸாருக்கு துப்பில்லை. தமிழக போலீஸார் பாரபட்சமாக நடந்தால், கலவர சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இந்துகள் மனதில் வந்துவிடும்” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.