dinakaran will contest rk nagar election as an independent candidate

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் 21ம் தேதி இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற வுள்ளது. இந்நிலையில் இந்தத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார் டிடிவி தினகரன். ஆனால், இம்முறை ஒன்று சுயேட்சையாக அல்லது தனிக்கட்சி துவங்கி போட்டியிடும் சூழலில் இருக்கிறார். 

இரட்டை இலைச் சின்னம் பறிபோன நிலையில், தினகரன் புதிதாக தனிக்கட்சி துவங்க வேண்டிய நிலையில் இருக்கிறார். அ.தி.மு.க.வுக்கும், தினகரனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள நிலையில், அவர் நீதிமன்றம் சென்று வழக்கம் போல் போராடினாலும், இடைத்தேர்தல் காலத்துக்குள் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது. மீண்டும் கட்சியையோ, சின்னத்தையோ பெறுவது கடினமான ஒன்று.

இன்றைய சூழலில் அ.தி.மு.க., என்ற பெயரையே, அவர் பயன்படுத்த முடியாது. எனவே தனது அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமானால், புதிதாக கட்சி துவங்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இப்படி கட்சி துவக்கினால், அதை, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தாக வேண்டும். அதன் பின்பே கட்சிக்கு ஒரு சின்னத்தை அவரால் பெற முடியும். 

எனவே தற்போதைய சூழ்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலில், அவர் சுயேச்சை வேட்பாளராகவே களம் இறங்க முடியும். முன்னதாக நின்று போன ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தொப்பி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். அதே சின்னத்தை மீண்டும் பெறுவோம் என்று தினகரன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும், அதே சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்குமா என்பது சந்தேகம்தான். 

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று, அவரின் ஆதரவாளர் செந்தில் பாலாஜி இன்று கூறியுள்ளார். எனவே, தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.