விரைவில் தமிழகத்தின் முதல்வராக தினகரன் பதவியேற்பார் - தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆம்பூர் எம்.எல்.ஏ அலப்பறை...
வேலூர்
வருங்காலத்தில் தமிழகத்தை ஆளும் தகுதி டிடிவி.தினகரனிடம் மட்டுமே உள்ளது என்றும் விரைவில் தமிழகத்தின் முதல்வராக அவர் பதவியேற்பார் என்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆம்பூர் எம்.எல்.ஏ ஆர். பாலசுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
டிடிவி.தினகரன் ஆதரவாளர்களின் வேலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆம்பூரில் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஆர்.பாலசுப்பிரமணி எம்.எல்.ஏ தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியது:
"வருங்காலத்தில் தமிழகத்தை ஆளும் தகுதி டிடிவி.தினகரனிடம் மட்டுமே உள்ளது. விரைவில் தமிழகத்தின் முதல்வராக அவர் பதவியேற்பார்.
நல்ல திறமையான, தகுதியானவரை ஜெயலலிதா நமக்கு வழங்கியுள்ளார். தற்போது 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளனர்.
விரைவில் தமிழகத்தில் மாற்றம் வரும். அதனால் அனைத்து, நகர ஒன்றியப் பகுதிகளிலும் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும்" என்று பேசினார்.
இந்தக் கூட்டத்தில் ஆம்பூர் நகரச் செயலாளர் ய.செ.சமரசன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் ஆர்.வடிவேல், பொருளாளர் அப்புபால் பாலாஜி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட குடியாத்தம் எம்எல்ஏ ஜெயந்தி, மாவட்ட துணைச் செயலாளர் சக்கரபாணி,
மாணவரணி ரமேஷ், திருப்பத்தூர் நகரச் செயலாளர் ஏ.கே.சி.சுந்தரவேல், மாதனூர் ஒன்றியச் செயலாளர் அகரம்சேரி ஆர். வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.