மோடிக்கு இது ஏக கெட்ட நேரம் ! திவாகரன் கூடவெல்லாம் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்றாராம்!?: வெளுத்துக் கட்டும் வெற்றிவேல்.
திவாகரன் மீதான கடுப்பை தினகரன் கூட ஆன் தி வேயில் மறந்துவிட்டு அடுத்த வேளையில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார். ஆனால் வெற்றி வேலோ இன்னமும் திவாவை திணறத்திணற வெச்சு செய்து கொண்டிருக்கிறார்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெற்றிவேலின் வாய் கிளறப்பட, அவரும் திவாகரனை திட்டித் தீர்ப்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில், இப்போது மீண்டும் திருவாய் மலர்ந்திருக்கும் வெற்றிவேல்...
“திவாகரன் ஒரு மன நோயாளி மட்டுமில்லை, பண நோயாளியும்தான். சின்னம்மாவின் குடும்பம் இவ்வளவு அதிகார மற்றும் பண செல்வாக்குடன் இருப்பதற்கு மூல காரணம் எம்.நடராஜன் தான். அவர் இல்லை என்றால் இந்த பகட்டெல்லாம் இவர்கள் யாருக்கும் இன்று இல்லை.
அப்பேர்ப்பட்ட எம்.என். அவர்களின் இறப்புக்கு எந்த அமைச்சரும் அதாவது முதலமைச்சர் உட்பட யாரும் வரவில்லை. இன்று அமைச்சராக இருக்கும் பலர் எம்.என். மூலம் எம்.எல்.ஏ.வானவர்கள்தான். ஆக நன்றியை மறந்த அந்த கூட்டத்தைத்தான் திவாகரன் இன்று போற்றிப் பாராட்டிக் கொண்டிருக்கிறார். தனது அக்காளின் கணவர் மரண துக்கத்தை விசாரிக்க வராதவர்களி இவர் போற்றுகிறார் என்றால் அதற்கான ஆதாயம் என்ன? பணம் தானே. ஆக இவரை ஒரு பண நோயாளி என்பதில் என்ன மாற்றுக் கருத்து இருக்க முடியும்! ஏற்கனவே திவாகரன் ஒரு மனநோயாளி என்பதை உதாரணங்களுடன் உலகுக்கு உணர்த்தியவன் நான்.
இதையெல்லாம் விட பெரும் கொடுமையை மன்னார்குடிக்கு செய்தவரும் இவரே. மன்னார்குடி மாபியா! எனும் அவப் பெயர் உருவாவதற்கு ஒரே காரணம் திவாகரன் தான்.
சின்னம்மாவின் காலில் விழுந்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பதவிகள் பெற்ற கூட்டம் இன்று அவரை விலக்கி வைத்துப் பேசுகிறது. அந்த நயவஞ்சக நரிகளின் ஆட்சியை கலைக்கத்தான் தலைவர் தினகரன் போராடிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த திவாகரனோ அந்த ஆட்சியை காப்பாற்றுவதற்கான அத்தனை காரியத்தையும் செய்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் கூட எங்கள் கட்சியின் சில நிர்வாகிகளை அழைத்து ‘நீங்களெல்லாம் எடப்பாடி அணிக்கு தாவிடுங்க. அந்த 18 எம்.எல்.ஏ.க்களிடமும் பேசுங்க.
அவங்களையும் இங்கே அலைச்சுட்டு வந்துடுங்க. மோடி கூட அட்ஜெஸ்ட்மெண்ட் ஆகிடுச்சு. எல்லா கேஸையும் வாபஸ் வாங்கிக்கலாம், செட்டில் பண்ணிக்கலாம்னு தகவல் மேலே இருந்து வந்துடுச்சு.’ன்னு சொல்லி கேன்வாஸ் பண்ணியிருக்கார். ஆனா பாருங்க இந்த மனநோயாளி திவாகரனெல்லாம் மோடி கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்றதைப் பத்திப் பேசுறாரு! மோடியோட கேடு கெட்ட நேரத்த பார்த்தீங்களா.
திவாகரனுக்கு இதெல்லாம் ஒரு பொழப்பா?” என்று வெளுத்துக் கட்டிவிட்டார்.