அவங்க பிளட் பிரஷரை எகிற வைக்கவே... எனக்கு ப்ரஷர் குக்கர்... சந்தோஷத்தில் தினகரன்!
ஐ.. ஜாலி...! வீட்டுக்கு வீடு இனி பிரஷர் குக்கர் கிடைச்சிடும் என்று ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கனவில் மிதக்கலாம்தான். காரணம், வெற்றிச் சின்னம் பிரஷர் குக்கர் என்று கையைக் காட்டி விட்டார் டிடிவி தினகரன்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் தினகரன் மூன்று சின்னங்களைக் கேட்டிருந்தார். தொப்பி, விசில், கிரிக்கெட் பேட். ஆனால், இந்த மூன்றுமே அவருக்கு ஒதுக்கப் படவில்லை. தொப்பிக்காக நீதிமன்றமே சென்று பார்த்தார். ஆனால் பருப்பு வேகவில்லை. கடைசியாக பிரஷர் குக்கரே அவருக்கு வந்துவிட்டது. முன்னதாக விசில், கிரிக்கெட் பேட் ஆகிய இரண்டும் கூட அவருக்கு ஒதுக்கப் படாமல் போனது.
தான் கேட்ட மூன்று சின்னமுமே தனக்கு ஒதுக்கப் படவில்லை என்பதால், வருத்தத்தில் இருந்த தினகரன், பின்னர் எந்த சின்னத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது தொடர்பாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தண்டையார்பேட்டையில் வெற்றிவேல், செந்தில் பாலாஜி, வழக்கறிஞர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை மேற்கொண்டு ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
இதனிடையே சுயேச்சை வேட்பாளரான அவருக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கி அறிவித்தது தேர்தல் ஆணையம். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் தினகரன். அவரிடம் பிரஷர் குக்கர் சின்னம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், மூன்று சின்னமுமே ஒதுக்கப் படாமல் பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறார்கள். ஆனால் இதற்காக நான் வருத்தப்படவில்லை. நான் முன்னரே கூறியிருக்கிறேன், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று. அதனால், நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். நான் ஏன் பிரஷர் குக்கரை தேர்ந்தெடுத்தேன் என்றால், அவர்களின் ப்ளட் பிரஷரை எகிற வைக்க வேண்டும் என்பதற்காகத்தான். இனி பாருங்கள் பிரஷர் குக்கரை..! என்று சொல்லி கிளம்பினார் தினகரன்.