dinakaran play game against panneer and edapadi
இலை வழக்கிலிருந்து நிபந்தனை ஜாமினில் திஹார் சிறையில் இருந்து வெளிவந்த தினகரனுக்கு இரண்டு விதமான சவால்களை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
மன்னார்குடி உறவுகளால், தமது பதவி பறிக்கப்பட்டு கட்சியில் தமக்குள்ள செல்வாக்கு பறிபோய் விட கூடாது என்பது ஒன்று. எக்காரணம் கொண்டும் பன்னீர் அணி அதிமுகவில் இனைந்து விடக்கூடாது என்பது மற்றொன்று.
இந்த இரண்டு காரணங்களுக்காகவே, எம்.எல்.ஏ க்கள் பலரை தம் பக்கம் இழுத்து, கட்சியில் தம்முடைய செல்வாக்கை நிலை நாட்டும் முயற்சியில் தினகரன் இறங்கி இருக்கிறார் என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.

தினகரனின் தன்னிச்சையான செயல்பாடுகள் காரணமாகவே, கட்சி மற்றும் ஆட்சியில் சசிகலா குடும்பத்தின் பிடி தளர்ந்து விட்டது. அவரை துணை பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று, ஒட்டு முடித்த மன்னார்குடி உறவுகளும் சசிகலாவை நெருக்கி வருகின்றன.
அதனால், சசிகலா தன்னுடைய பதவியை பறித்தால், கட்சியில் யாரும் தம்மை மதிக்காத நிலை ஏற்பட்டு தடயம் தெரியாமல் போய்விடுவோம் என்று தினகரன் அஞ்சுகிறார். அதன் காரணமாகவே, தன்னுடைய பதவியின் மீது கை வைத்தால், ஆட்சியே கவிழும் என்று, மன்னார்குடி உறவுகளை அச்சுறுத்துவது ஒரு திட்டம்.
மறுபக்கம், அணிகளை இணைக்க சொல்லி வலியுறுத்தும் பிரதமர், பன்னீருக்கே, அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதற்கு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்கள் மத்தியில் பெரிதாக எந்த எதிர்ப்பும் இல்லை.
.jpg)
எப்படியாவது இரு அணிகளும் இணைந்தால், இரட்டை இலை சின்னத்தை சிக்கல் இல்லாமல் பெற்று, வரப்போகும் தேர்தலை பிரச்சினை இன்றி சந்திக்கலாம் என்பதே, பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.
ஆனால், பன்னீர் அணி அதிமுகவுடன் இனைந்து விட்டால், சசிகலா குடும்பம் அனைத்தும், கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து மூட்டை கட்ட நேரும் என்ற அச்சம் அதிகமாகவே உள்ளது.
அதற்காக, பன்னீர் அணி இணைவதை பெரும்பாலான எம்.எல்.ஏ க்கள் எதிர்க்கின்றனர் என்று காட்ட வேண்டும் என்பதற்காகவே, 30 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ க்களை தம் பக்கம் இழுத்து, பன்னீர் அணி இணையாமல் முட்டுக்கட்டை கொடுத்து வருகிறார் தினகரன்.
ஆனாலும், இரு அணிகளின் முக்கிய தலைவர் அனைவரும் தங்களுக்குள் இருந்த தயக்கங்களை எல்லாம் மறந்து, தொலைபேசியில் சகஜமாக பேச ஆரம்பித்து விட்டனர்.

மேலும், தினகரன் என்ன செய்தாலும், ஆட்சியை கவிழ்க்க முடியாது. அப்படி ஆட்சியை கவிழ்க்க முற்பட்டால், அவரிடம் இருக்கும் அத்தனை எம்.எல்.ஏ க்களும் ஓட்டம் பிடித்து விடுவார்கள் என்பது முதல்வருக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
அதன் காரணமாகவே, தினகரன் ஆடும் வரை ஆடட்டும் என்று, முதல்வர் எடப்பாடி தரப்பும், சசிகலா குடும்ப உறவுகளும், அமைதியாகி விட்டனர். அதே சமயம் அவரது எந்த மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டோம் என்பதிலும் எடப்பாடி தரப்பு உறுதியாக இருக்கின்றனர் என்றும் அதிமுகவினர் கூறுகின்றனர்.
