Dinakaran is to be beaten by my hand by divakaran
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தினகரன் தரப்புக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வர இருக்கிறது! அதுவும் விரைவில் வர இருக்கிறது! இதைத்தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் களேபரங்கள் கிளம்ப இருக்கின்றன!...என்று அரசியல் பார்வையாளர்கள் நொடிக்கு நொடி பெரும் ஆரூடங்களை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த சூழலில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ‘நான் பிடிச்ச பாம்புக்கு நாலு காது’ என்று தினகரனை தினம் தினம் திட்டித் தீர்த்துக் கொண்டேயிருக்கிறார் திவாகரன். அந்த வகையில் இப்போது ‘நான் அங்கே இருந்திருந்தால் தினகரனை அறைந்திருப்பேன்’ என்று ஒரு பகீர் டயலாக்கை திரிகொளுத்திப் போட்டிருக்கிறார்.
ஏன் இந்த கோபமாம்?...

அதற்கான காரணங்களை விரிவாய் பேசும் திவாகரன்...”அம்மா இறந்துவிட்டார் என்று தெரிந்ததும், அக்கா உட்கார்ந்து அழுது தீர்த்துக் கொண்டிருந்தார். புதிய முதல்வரை மாநிலத்துக்கு நியமித்தாகவேண்டிய சூழ்நிலை. டெல்லி மேலிடத்து பிரஷரும் இணைந்து கொண்டது. அந்த நேரத்தில் நான் தான் சமயோசிதமாக செயல்பட்டு, அம்மாவின் ஆல்டைம் சாய்ஸான பன்னீர்செல்வத்தை முதல்வராக்கிட அக்கா சசிகலாவிடம் சொன்னேன்.
அதுவே நடந்தது.அத்தனை பேரையும் சமாளித்து அழகாய் அரசு நடத்திக் கொண்டிருந்த பன்னீர்செல்வத்தை தினகரனும், வெங்கடேஷும் டார்ச்சர் கொடுத்து சித்ரவதை செய்தார்கள். தினகரனுக்கோ, எப்படியாவது முதல்வராகிவிட வேண்டும்! எனும் குளிர் போட்டு ஆட்டியது.சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்து, அக்கா சிறை செல்ல தயாரான நேரம். அவரிடம் வந்து ‘என்னை முதலமைச்சராக்கிட்டு போங்க.’ என்று தினகரன் கேட்டிருக்கிறார்.

ஜெயிலுக்கு போகும் நபரிடம் சி.எம். சீட் கேட்டவர் தினகரன். இப்படியொரு மனிதனை வேறெங்காவது பார்த்திருக்கீர்களா. தினகரன் இப்படி அக்காவை (சசிகலா) நச்சரித்ததற்கு அமைச்சர் செங்கோட்டையனும், தளவாய் சுந்தரமும் சாட்சி. நான் மட்டும் அந்த நேரத்தில் அங்கே இல்லை. இருந்திருந்தால் தினகரனை அறைந்திருப்பேன்.ஆனால் தினகரனுக்கு முதல்வர் பதவி கொடுப்பது நியாயமுமில்லை, அது ஜனநாயகமில்லை என்பதால் அக்கா மறுத்துவிட்டார்.
அதன் பிறகு மீண்டும் நச்சரித்துதான் துணை பொதுச்செயலாளர் பதவியை கேட்டுப் பிடுங்கியிருக்கிறார் தினகரன்.
இவரையெல்லாம் போய் மக்கள் தலைவர்! என்கிறார்கள். கஷ்டகாலம்.” என்று திணறத்திணற திட்டியிருக்கிறார் திவா.
