ஓங்கி அடித்த சசி.. ஏறி மிதித்த தினகரன்..! ஜெ., சமாதி படும் அல்லல்..!
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தினகரன் மரியாதை செலுத்த சென்றபோது கூட்ட நெரிசலால் தடுமாறிய தினகரன், ஜெயலலிதாவின் சமாதி மீது கால் வைக்க நேர்ந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைந்தார். ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்தை ஆட்சியாளர்கள், தொண்டர்கள் என தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் அனுசரித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு இன்று காலை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் அண்ணாசாலையில் இருந்து அமைதி பேரணியாக வந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
கட்சியின் ஏராளமான தொண்டர்கள் மெரினாவில் குவித்துள்ளனர். அவர்கள் இன்று காலை முதலே ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவருகின்றனர்.
இந்நிலையில், தினகரன் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையிலிருந்து வாலாஜா சாலை வழியாக தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணியாக வந்து மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தினகரனுடன் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் வந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
தினகரனுடன் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் வந்தனர். அவர்கள் அனைவரையும் அனுமதிக்க போலீசார் மறுத்தனர். அதனால் போலீசாருடன் தினகரனின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடுத்ததையும் மீறி தினகரனின் ஆதரவாளர்கள், ஜெயலலிதாவின் நினைவிடம் அருகே சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் அதிகமானதால் தினகரன் நிற்க வழியின்றி, தடுமாறி ஜெயலலிதாவின் சமாதியின் மீது கால்வைத்தார். பின்னர் சுதாரித்து உடனடியாக பின்னால் வந்தார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவின் மற்றும் ஆட்சியாளர்களின் எந்த விதமான நடவடிக்கைகளாக இருந்தாலும் ஜெயலலிதாவின் நினைவிடத்திலிருந்தே தொடங்குகிறது.
ஜெயலலிதா வாழ்ந்தபோது எப்படி அவரை வழிபட்டார்களோ அதேபோல அவரது சமாதியையும் ஆட்சியாளர்களும் தொண்டர்களும் வழிபடுகின்றனர்.
ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் இருந்து தர்மயுத்தத்தை தொடங்கினார் பன்னீர்செல்வம்.
கடந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வழிபட்டுவிட்டு சட்டசபைக்கு சென்றார் அப்போதைய நிதியமைச்சர் ஜெயக்குமார்.
சிறைக்கு செல்லும்முன் ஜெயலலிதாவின் சமாதியில் மூன்று முறை அடித்து சசிகலா சபதம் எடுத்தார்.
இப்படியாக ஜெயலலிதாவின் நினைவிடத்தை கோவில் போல அக்கட்சியினரும் ஆட்சியாளர்களும் சசிகலாவும் தினகரனும் வழிபடுகின்றனர். இந்நிலையில் இன்று, ஜெயலலிதாவின் நினைவுதினத்தை முன்னிட்டு மரியாதை செலுத்த சென்ற நேரத்தில் கூட்ட நெரிசலில் தடுமாறி வேறு வழியின்றி சமாதியின் மீது தினகரன் கால்வைத்துவிட்டார். பின்னர் உடனடியாக காலை எடுத்துவிட்டு பின்னால் வந்தார்.