ஜெயலலிதாவை பின்பற்றும் தினகரன்.. தஞ்சையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்!! ஆட்சியாளர்களை அலறவிடும் தினா
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் தினகரன் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம், வரும் 29ம் தேதியுடன் நிறைவடைகிறது. காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையை உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடாமல், செயல் திட்டம் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அந்த பகுதியை சுட்டிக்காட்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நிலைப்பாட்டை மத்திய அரசும் எடுத்துள்ளது. ஆனால், அந்த செயல் திட்டம் என்பது, நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பில் குறிப்பிட்ட மேலாண்மை வாரியம் தான் எனவும் அதனால் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு, அரசியல் கட்சிகள், விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், மத்திய அரசு சார்பில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் இந்த செயல்பாட்டிற்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், நீதிமன்றம் விதித்த கால அவகாசத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தஞ்சாவூர் திலகர் திடலில் தினகரன் உண்ணாவிரதம் இருந்துவருகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள், தினகரன் ஆதரவாளர்கள், விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் அந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
எந்தவித அதிகாரமும் இல்லாத காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்கும் நடவடிக்கையை கைவிட்டு மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தினகரன் தலைமையில் இந்த உண்ணாவிரதம் நடந்துவருகிறது.
காவிரியில் தமிழக உரிமைக்காக 1993 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார். அதே வழியை பின்பற்றி தினகரனும் தற்போது காவிரி மேலாண்மை வாரியத்துக்காக உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.