நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தினகரனுடன் சமரசமாக செல்வது தான் நல்லது என்று அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாகவே தங்களுக்குள் பேச ஆரம்பித்துள்ளனர். 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தினகரனுடன் சமரசமாக செல்வது தான் நல்லது என்று அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாகவே தங்களுக்குள் பேச ஆரம்பித்துள்ளனர். தர்மயுத்தம் நடத்தி அ.தி.மு.க.வை உடைத்த ஓ.பி.எஸ் பின்னர் சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கிய பிறகு கட்சியை ஈ.பி.எஸ் உடன் இணைந்து நடத்தி வருகிறார். பா.ஜ.க மேலிடத்தின் ஆதரவு இருப்பதால் தற்போது வரை அ.தி.மு.க அரசுக்கு பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் அ.தி.மு.க கட்சி என்று பார்த்தால் ஜெயலலிதா இருந்த போது இருந்த சூழல் தற்போது இல்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆட்சி வலுவாக இருந்தாலும் கட்சி பலவீனம் அடைந்து வருவது மூத்த நிர்வாகிகளை கலக்கம் அடைய வைத்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அடைந்த தோல்வி அ.தி.மு.கவின் தற்போதைய பலவீனமான நிலையை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இந்த நிலையில் தான் அ.தி.மு.கவின் செயற்குழு கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது பேசிய பலரும் அ.தி.மு.க பலவீனமாகி வருவதை கூறியே வருத்தம் அடைந்துள்ளனர். இதற்கு எல்லாம் உச்சமாக நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி என்று வரும் போது மூன்றாம் தர கட்சிகள் கூட அ.தி.மு.க.வை விரும்பவில்லை. பழம்பெறும் கட்சியான காங்கிரஸ் தொடங்கி நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போன்ற கட்சிகள் கூட அ.தி.மு.கவுடன் கூட்டணிக்கு தயாராக இல்லை. இதனால் ஏற்பட்ட விரக்தி பல்வேறு நிர்வாகிகளின் செயற்குழு பேச்சில் வெளிப்பட்டது.

அதே சமயம் தினகரன் செல்லும் இடம் எல்லாம் கூட்டம் நிரம்பி வழிகிறது. என்ன தான் தினகரன் காசு கொடுத்து கட்சிக்கு ஆள் கூட்டி வருவதாக சொன்னாலும் கூட அ.தி.மு.க தொண்டர்களில் ஒரு தரப்பினருக்கு தினகரன் மீது நம்பிக்கை இருக்கிறது. மேலும் கூட்டணி என்று வரும் போது தினகரனுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க மத்தியில் ஆட்சியில் இருக்கும் வரை அ.தி.மு.க அரசுக்கு ஆபத்து இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம், ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்தால் நமது எதிர்காலம் என்னவாகும் என்று அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். 

எனவே அவர்கள் கடந்த காலத்தை போல ஏதேனும் ஒரு நபரிடம் அடைக்கலமாகி அமைச்சராகவும், எம்.பியாகவும் காலத்தை ஓட்ட வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துள்ளனர். இதற்கு ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ்சை காட்டிலும் தினகரன் சரியாக இருப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். எனவே தினகரனுடன் சமரசமாக சென்று நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளலாம் என்று வட மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் தங்களுக்குள் பேச ஆரம்பித்துள்ளனர். விரைவில் இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவர்கள் பேசுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கூறும் முடிவு தான் தமிழக அரசியலின் அடுத்த கட்டமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.