தொகுதியில் ரவுண்டு கட்டும் பிரஷர் குக்கர்... சொன்ன மாதிரியே பிரஷரை எகிற வெச்சிட்டாரு தினகரன்!
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வரும் 21ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுகாக, இப்போது தொகுதியில் பிரசாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னும் பன்னிரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் ஒவ்வொரு தரப்பும் தங்கள் பிரசார பலத்தைக் காட்டி களமிறங்கி விட்டனர்.
இரட்டை இலைச் சின்னம் கைவிட்டுப் போன நிலையில், தொடர்ந்து சுயேச்சையாக நின்று தொப்பி சின்னத்துக்காக மல்லுக் கட்டிய டிடிவி தினகரனுக்கு அதுவும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. இந்நிலையில் அவருக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற பழமொழியைக் கூறிக்கொண்டு, பிரஷர் குக்கர் சின்னத்தைத் தேர்ந்தெடுத்ததே, துரோகிகளின் பிளட் பிரஷரை எகிற வைக்கத்தான் என்று கூறி சவால் விட்டார் தினகரன்.
இந்த சவாலை நிறைவேற்றும் விதமாக, தொண்டர் படையுடன் களத்தில் இறங்கிவிட்டார் தினகரன். தன் பங்குக்கு தீவிர பிரசாரம் செய்து வருகிறார் டிடிவி தினகரன். இன்று ஆர்.கே. நகர் தேர்தல் பிரசாரத்தில் டிடிவி தினகரன் பேசிய போது, ஆர்.கே.நகர் தேர்தல் தமிழக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் தேர்தலாக அமையும். மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சனையில் தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து, பிரஷர் குக்கருக்கு வாக்கு சேகரித்தார்.
இதனிடையே, தொகுதியில் பிரஷர் குக்கர் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் எல்லாம் வருத்தத்தில் இருப்பார்கள். இனிமேல் விற்பனை ஆகுமா என்றுதான் என தொகுதி மக்கள் காதைக் கடித்ததையும் கேட்க முடிந்தது. ஆக, எப்படியோ பிரஷரை எகிற வைத்துவிட்டார் தினகரன்.