ரூ. 2 ஆயிரம் கோடி கொடுத்தார்களா..? அடுத்தடுத்த சர்ச்சைகளில் திருமா..!
ஆதி தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் நாகராஜன் பேசியதாக கூறப்படும் ஒரு வீடியோ முகநூல், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் கடந்த 4 நாட்களாக வேகமாக பரவி, அது தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்னை வேளச்சேரியில், தான் தங்கியிருந்த இடத்தில் இருந்து புறப்பட்ட திருமாவளவன் தனது ஷூ மழைநீரில் நனைந்து விடக்கூடாது என்பதற்காக விசிக தொண்டர்கள் வரிசையாக வைத்த நாற்காலிகளில் தாவித்தாவி நடந்தார். தொண்டர்கள் அந்த நாற்காலிகளை தொடர்ந்து இழுத்து வர கடைசியில் அதிலிருந்தவாறே குதித்து தனது காருக்குள் உட்கார்ந்து பயணித்தார்.
இந்த வீடியோ காட்சி சமூக ஊடங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. வழக்கமாக இதுபோன்று சமூக ஊடங்களில் பாஜகவினர் எழுப்பும் கேள்விகளுக்கு, திருமாவளவன் நேரடியாக பதில் சொல்லவே மாட்டார். அவருடைய கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசுதான் கொந்தளித்து பதில் அளிப்பது வழக்கம். ஆனால், தனது இமேஜ் முற்றிலுமாக டேமேஜ் ஆகிவிடும் என்று கருதி திருமாவளவனே ஒரு விளக்கம் கொடுத்தார். “டெல்லி கிளம்பியதால் புதிய உடை அணியவோ, ஷூவை கழற்றவோ முடியாது. விமானத்திற்கு தாமதமாகும் என்பதால் தண்ணீர் படாமல் நாற்காலிகள் மீது நடந்து சென்றேன். நான் கீழே விழாமல் சக தொண்டர்கள் பார்த்து கொண்டார்கள்.
அடிமைப்படுத்துதல் போன்ற மனநிலை எனக்கு இல்லை என்பது என் மீது குற்றம்சாட்டும் பாஜக போன்ற கட்சிகளுக்கு தெரியும். பேசவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருந்தாலும் அவற்றை விட்டுவிட்டு எங்கள் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர்” என்று குறிப்பிட்டு இருந்தார். திருமாவளவன் மீதான இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆதி தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் நாகராஜன் பேசியதாக கூறப்படும் ஒரு வீடியோ முகநூல், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் கடந்த 4 நாட்களாக வேகமாக பரவி, அது தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அதில் அவர் “திமுக, கிறிஸ்துவ, இஸ்லாமிய உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட அமைப்புகளிடமிருந்து திருமாவளவன் பணத்தைப் பெற்று இருக்கிறார். எங்களது நினைவுக்கு எட்டியவரை 2000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து குவித்திருக்கிறார்” என்று குற்றம் சாட்டியிருந்தனர்.
திருமாவளவன், 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களையும் குறிப்பிட்டிருந்தார். அதன்படி அவருக்கு, 58 லட்சத்து 71 ஆயிரத்து 292 ரூபாய்க்கு அசையும் சொத்துகளும் 18 லட்சத்து 27 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிற்கு அசையா சொத்துகளும் என மொத்தம் 76 லட்சத்து 99 ஆயிரத்து 92 ரூபாய் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
2014 தேர்தலின்போது அவருடைய சொத்தின் மொத்த மதிப்பு 76 லட்சத்து 50 ஆயிரத்து 241 ரூபாய் ஆக இருந்தது. அதாவது அடுத்த 5 ஆண்டுகளில் அவரது சொத்தின் மதிப்பு 48 ஆயிரத்து 851 ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது. அப்படி இருக்கும்போது திடீரென திருமாவளவன் 2000 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்திருக்கிறார், என்று குற்றச்சாட்டு எழுந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விவகாரம் தற்போது இன்னும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழக பாஜகவினர், இதை தங்களுக்கு கிடைத்த துருப்புச் சீட்டாக பயன்படுத்தி அரசியல் ஆட்டத்தை தொடங்கி உள்ளனர். இதுகுறித்து டெல்லி பாஜக மேலிடத்தின் கவனத்திற்கும் அவர்கள் கொண்டு சென்றுள்ளனர்.