நிராயுதபாணியாகி கையைக் கட்டி நின்றாரா திருமாவளவன்..? மீண்டும் மீண்டும் விளக்கம்..!
அண்ணன் ராஜகண்ணப்பன் எனது உடன்பிறந்த சகோதரர் மாதிரி. நான் அவரை கட்டிப்பிடிப்பேன். அவர் என்னை கட்டிப்பிடிப்பார். எங்களுக்குள் எந்த இடைவெளியும் கிடையாது
அண்ணன் ராஜகண்ணப்பன் எனது உடன்பிறந்த சகோதரர் மாதிரி. நான் அவரை கட்டிப்பிடிப்பேன். அவர் என்னை கட்டிப்பிடிப்பார். எங்களுக்குள் எந்த இடைவெளியும் கிடையாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை பார்ப்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்று இருந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். அங்கு ராஜகண்ணப்பன் விலையுயர்ந்த சோபாவில் அமர்ந்திருக்க திருமாவளவன் உடைந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார். கைகட்டி தன்மையுடன் அமர்ந்திருப்பதை போல புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரசியலுக்கு உட்பட்ட பார்வையில் பார்க்கும் பொழுது திருமாவளவன் அவர்களுக்கு இந்த இருக்கை சற்று குறைவானதே. இதன் விவரம் என்ன? உங்களை திட்டமிட்டு பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார வைத்ததாக புரிந்துகொள்ளப்படுகிறது. இயன்றால் இதன் உண்மைத் தன்மையை தெளிவுபடுத்துங்கள் என பலரும் கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்துள்ள திருமாவளவன், ‘’அந்த ப்ளாஸ்டிக் சேரை நானே தான் இழுத்துப்போட்டு உட்கார்ந்தேன். எனக்கு என்ன தேவை இருக்கிறது நான் பணிந்து போய் உட்கார வேண்டிய அவசியமே கிடையாதே. குதர்க்கவாதிகள், காழ்ப்புணச்சி கொண்டவர்கள்,விடுதலை சிறுத்தைகள் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் ஏதாவது சேரு பூச வேண்டும் என நினைக்கிறார்கள்.
அதனை நான் ஓருபோதும் பொருட்படுத்த மாட்டேன். எனது நலனில் அக்கறை உள்ளவர்கள் கேட்டால் நான் பதில் சொல்வேன். எனது அம்மா முன்னால் கைகட்டி நிற்பேன். எனது தோழர்கள் முன்னால் கைகட்டி நிற்பேன். இது என்னுடைய மேனரிசம் அது. இதைக்கூட புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றால் அவர்களது இயலாமை, ஆற்றாமையை காட்டுகிறது’’என விளக்கமளித்து இருந்தார்.
இந்நிலையில் இது குறித்து மீண்டும் விளக்கமளித்துள்ளார் திருமாவளவன். ‘’எப்போதுமே நிலக்கிழார், பண்ணையாருக்கும் உழைப்பவர்களை கண்டு அச்சம் இருக்கும். அந்த அச்சத்தால் தான் நிலக்கிழார்கள் கையை கட்ட வைக்க வைக்கிறார்கள். அவர்கள் பயந்து கொண்டு எங்கே தன்னை அடித்து விடுவார்களோ என்கிற அச்சத்தால்தான் அவனை நிராயுதபாணியாக்கி கையைக் கட்டி நிற்க வைப்பார்கள். நான் கையகட்டி உட்கார்ந்திருந்தால் எனக்கு எந்த பயமும் இல்லை என்று அர்த்தம்... அண்ணன் ராஜகண்ணப்பன் எனது உடன்பிறந்த சகோதரர் மாதிரி. நான் அவரை கட்டிப்பிடிப்பேன். அவர் என்னை கட்டிப்பிடிப்பார். எங்களுக்குள் எந்த இடைவெளியும் கிடையாது’’எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திருமாவளவனின் சகோதரி பானுமதியில் முதலாமாண்டு நினைவு அஞ்சலி வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. அதனை சி.எஸ்.ஐ கிறிஸ்தவ பிரமுகர்களை கூட்டி பிராத்தனை கூட்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார் திருமாவளவன். இதற்கும் தற்போது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.