வீம்புக்கு கட்சி ஆரம்பித்து, வெறுங் கையேடு மொழம் போடும் சசிகலாவின் சகோதரர் மன்னார்குடி திவாகரன், எம்.பி தேர்தலில் போட்டி போட கூட்டணி டீல் பேச நேராக தனது மகனை அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு போன ஜெய் ஆனந்த்திடம் பக்குவமாக பேசி அனுப்பி வைத்துள்ளார் மத்திய அமைச்சரும், பாஜக தமிழக பொறுப்பாளருமான பியூஸ் கோயல் 

தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் பியூஸ் கோயலை நேற்று சந்தித்து பேசியிருப்பது, தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால் அதை அதிமுக அடித்து துவம்சம் பண்ணியிருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தொடக்க காலத்தில் இருந்தே நேரடி அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத திவாகரன், ஜெயலலிதா மறைவுக்குப் பின் தனது மகன் ஜெய் ஆனந்தை நேரடி அரசியலில் இறக்கியுள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அதிமுகவில் நடந்தது ஊரறிந்த விஷயம்.மீண்டும் அதற்குள் நாம் செல்ல வேண்டியதில்லை. அதிமுக உடைந்ததற்கு காரணமே தினகரன்தான் என்பது திவாகரனின் ஆணித்தரமான குற்றச்சாட்டு. தனது அக்கா சசிகலாவுக்கு பெரிய தினகரனை பற்றிய தவறான தகவல்களை அளித்து அவசர நேரத்தில் அள்ளித் தெளித்த கோலம் போல் முடிவு எடுக்கவைத்ததால் தான் இன்று நமக்கு இந்த நிலை என, திவாகரன் சசியிடம் சொல்லிப் பார்த்தார். ஆனால் தினகரனை தம்பியிடம் விட்டுக்கொடுக்கவில்லை சசி. இதனால் ஆத்திரமடைந்த திவாகரன் தனது பெரியக்கா மகனான தினகரனை விஷக்கிருமி, பித்தலாட்டக்காரன் என தாறுமாறாக கிழித்துத் தள்ளினார்.

ஒரு கட்டத்தில் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.சை அனுசரித்து செல்ல முடிவெடுத்த திவாகரன், வீம்புக்கு "அண்ணா திராவிடர் கழகம்" என்ற கட்சியை தொடங்கி, அதற்கு தனது மகன் ஜெய் ஆனந்தை இளைஞரணி செயலாளராக்கினார். ஜெய் ஆனந்த் என்றால் யார் என்பதை தமிழகத்திற்கு தெரிவிக்கும் வகையில், தமிழக அரசியல்வாதி லிஸ்டில் சேர்த்துவிட்டார். 

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் வேளைகளில் பிசியாக இருக்கிறது. திமுக அதிமுக என இரண்டு கட்சிகளும் பெரும் பலத்தோடு இருக்கிறது. எப்படியாவது இந்த இரண்டு கூட்டணியில் இடம்பிடித்துவிட வேண்டும் என்ற பிளானில் முதல் கட்ட முயற்சியாக தனது மகன் ஜெய் ஆனந்தை டெல்லிக்கு அனுப்பி மத்திய அமைச்சரை பியூஸ் கோயலை சந்தித்து பேச வைத்தார். 

அந்தச் சந்திப்பின் போது, பிஜேபி- அதிமுக கூட்டணியில் தங்களுக்கு ஒரு தொகுதி தர வேண்டும் என்றும், வெற்றியை உறுதிபடுத்துகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டதாம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார் எனவும் கூறப்பட்டதாம். ஜெய் ஆனந்தின் கோரிக்கையை கேட்டுக்கொண்ட பியூஸ் கோயல், ஜெய் ஆனந்த் வந்த விஷயத்தை காது கொடுத்துக் கூட கேட்காமல் பக்குவமாக பேசி அனுப்பியிருக்கிறார். 

ஆனாலும், ஜெய் ஆனந்திடம் தங்கமணியிடம் இது பற்றி பேசும்படி பியூஸ் சொல்லி அனுப்பினாராம். இதனையடுத்து தங்கமணியை சந்திக்கும் முயற்சிகள் ஒரு புறம் நடக்க, திவாகரன் தரப்புக்கு சீட் தரக்கூடாது என சீனியர் அமைச்சர்கள் நேரடியாகவே சொல்கிறார்களாம். ஆனாலும் கிரீன் சிக்னல் கிடைக்காதா என அதிமுகவின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறாராம் திவாகரன்.