எங்க அக்கா வாழ்க்கை போனதே ”ஜெயலலிதா”வால்தான்..! திவாகரன் பகிரங்க குற்றச்சாட்டு..!
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகிவருகின்றனர்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் உள்ளனர். சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கட்சியிலிருந்து ஒதுக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கிய பன்னீர்செல்வத்தின் கோரிக்கையின்படியே சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டனர்.
இதையடுத்து சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உறவினர்கள் என சசிகலாவுடன் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடத்தப்பட்டது. அதுபோதாதென்று, சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சிறை தண்டனை என அடுத்தடுத்து பல்வேறு பிரச்னைகளை சசிகலாவின் குடும்பம் சந்தித்துவருகிறது.
ஆனாலும் அப்போதெல்லாம் அதை பெரிதாக காட்டிக்கொள்ளாமல் இயல்பாக பேட்டி கொடுத்துவந்த தினகரன், திவாகரன் ஆகியோர், ஜெயலலிதாவின் வீட்டிற்குள்ளே வருமான வரித்துறையினர் புகுந்ததும் சற்றே கலக்கமடைந்துள்ளனர்.
இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை தொடர்பாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
சசிகலாவை ஜெயலலிதா நன்றாக பயன்படுத்திக்கொண்டு நிராயுதபாணியாக விட்டு சென்றுவிட்டார். ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் கூடவே இருந்த சசிகலாவிற்கு எந்தவிதமான பாதுகாப்பும் செய்துகொடுக்காமல் தன்னந்தனியே தவிக்க விட்டு சென்றுவிட்டார் ஜெயலலிதா.
1996-ம் ஆண்டிலிருந்தே சசிகலா விசாரணை வளையத்திற்குள் தான் இருக்கிறார். சசிகலாவின் நிலை வேறு எந்தவொரு பெண்ணிற்கும் வரக்கூடாது.
சசிகலாவின் வாழ்க்கை மற்ற பெண்களுக்கு ஒரு பாடம் என திவாகரன், தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகும்கூட ஜெயலலிதாவை விமர்சிக்கவோ அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கவோ பலர் யோசிக்கும் நிலையில், துணிச்சலாக ஜெயலலிதா மீது திவாகரன் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.