ஏன் உங்களை பதவி நீக்கம் செய்யக் கூடாது? கருணாஸ் உட்பட 4 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்புகிறார் சபாநாயகர் !!
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அதிமுகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதாலும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாலும் ஏன் உங்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என கருணாஸ் உட்பட 4 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சரை அவதூறாக பேசியதாக எம்.எல்.ஏ. கருணாஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
கருணாசின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், அவர் எம்.எல்.ஏ.வாக நீடிக்க வேண்டுமா? என பலரும் கேள்வி எழுப்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. பதவியில் உள்ள கருணாஸ் , டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு அளித்து வரும் அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தன சபாபதி, கள்ள்க்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ கலைச் செல்வன் ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து சபாநாயகர் தனபாலுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தினார்.
மேலும் இவர்கள் 4 பேரும் அதிமுக சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகி தற்போது அந்த கட்சிக்கு எதிராக நடத்து கொள்வதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து கருணாஸ் உட்பட 4 எம்எல்க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.