காவல் மானிய கோரிக்கையில் டிஜிபி ஆப்சென்ட் - துரைமுருகன் கண்டித்தவுடன் சபைக்கு வந்தார்!
தமிழகத்தில் குட்கா விற்பனை விவகாரத்தில் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் சரமாரியான கேள்விகள் எழுப்பின.
இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மீதான மானிய கோரிக்கை இன்று நடந்தது. உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சபாநாயகர் தனபால், 2 நாட்களுக்கு பிறகு இன்று சட்டமன்றம் வந்தார்.
காவல்துறை, தீயணைப்பு துறை, மீட்புத்துறை ஆகியவற்றுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.
அப்போது, எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், ஒவ்வொரு துறை மீதான மானிய கோரிக்கையின் மீது விவாதம் நடத்தும்போது, அந்தந்த துறையின் உயர் அதிகாரிகள் சபையில் இருக்க வேண்டும். ஆனால், இன்று காவல்துறை மீதான மானிய கோரிக்கை நடக்கும் நேரத்தில், தமிழக டிஜிபி ராஜேந்திரன் வரவில்லை. அவர் வந்த பிறகே நான் பேசுவேன் என கூறிவிட்டு, தனது இருக்கையில் அமர்ந்துவிட்டார்.
அப்போது, அவையில் இருந்த மின்துறை அமைச்சர் தங்கமணி, சம்பந்தப்பட்ட உள்துறையின் செயலாளர் சட்டமன்றத்தில் இருக்கிறார். இதனால், டிஜிபி வரவேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறினார்.
அதற்கு பதில் அளித்த துரைமுருகன், இதற்கு முன் நடந்த கூட்டங்களில் டிஜிபி, கமிஷனர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால், இன்று நடக்கும் தனது துறைக்கான முக்கிய கோரிக்கை என தெரிந்தும் அவர் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பினார்.
இதைதொடர்ந்து, டிஜிபி ராஜேந்திரன், தனது அலுவலகத்தில் இருந்து, தலைமை செயலகத்துக்கு சென்றார். ஐஏஎஸ் அதிகாரி நிரஞ்சன்மாடியின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தார். இதை தொடர்ந்து மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.