முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பொறுப்பு முதலமைச்சர் அவசியம் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்துக்கு பொறுப்பு முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் தமிழகத்துக்கு பொறுப்பு முதலமைச்சர் ஒருவரை நியமிக்க தேவையில்லை என்றும் கூறி வருகின்றனர்.
திமுக பொருளார் மு.க.ஸ்டாலினும் தமிழகத்துக்கு பொறுப்பு முதலமைச்சர் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். ஆனால், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தமிழகத்துக்கு பொறுப்பு முதலமைச்சர் தேவையில்லை என்று அதிரடியாக தனது கருத்தை கூறினார்.
இதேபோலவே தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். காவிரி நிதிநீர் விவகாரம் குறித்து பேச, பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்திப்பதற்காக சென்னை விமான நிலையம் வந்தார் தமிழிசை. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் புதிய அல்லது பொறுப்பு முதலமைச்சரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.
